மகேந்திர சிங் தோனி இந்தியாவுக்காக ஆடினால் எங்களுக்கு எளிதாக இருக்கும் என சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் கூறியுள்ளார். 2019-ம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதி போட்டிக்கு பின்னர் தோனி இந்தியா அணிக்காக எந்த சர்வதேச போட்டிகளிலும் விளையாடவில்லை. தோனியின் ஓய்வு குறித்து ஒருபுறம் பேச்சுகள் இருந்தாலும் பல முன்னணி வீரர்கள் தோனிக்கு ஆதரவான கருத்துக்களையே முன்வைத்தனர். தேர்வுக்குழுவினரிடம் தோனி குறித்த கேள்வியை முன்வைக்கும்போது இதற்கு தோனிதான் பதிலளிக்க வேண்டும் என முடித்துக்கொண்டனர்.
தோனி இந்திய அணியில் சில மாதங்களாக விளையாடாததால் அவரது பெயர் ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டது. தோனிக்கு இதெல்லாம் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவர் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார். இந்நிலையில்தான் தோனி ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக ஆடினால் இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்கலாம். தோனி மட்டுமல்ல வாய்ப்புக்காக காத்திருக்கும் மூத்தவீரர்கள், இளம்வீரர்களுக்கும் இதேநிலைதான் என்ற கருத்தை தேர்வுக்குழு முன்வைத்தது.
ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடி வரும் தோனி சேப்பாக்கம் வந்து பயிற்சியில் ஈடுபட்டார். இந்நிலையில் கொரோனா நோய்த்தாக்கம் அனைவரையும் முடக்கியுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடக்குமா எனத் தெரியவில்லை. தோனி மீண்டும் இந்திய அணிக்காக ஆடமாட்டாரா என ரசிகர்கள் ஏங்குகின்றனர். இதேகருத்தைதான் சுழற்பந்துவீச்சாளரான குல்தீப் யாதவ் முன்வைத்துள்ளார்.
அதில், “ஒரு போட்டியில் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுவதற்கு விக்கெட் கீப்பர்களும் ஒரு காரணம். பேட்ஸ்மேனின் நகர்வுகளை கச்சிதமாக கணித்து பந்துவீச்சாளர்களுக்கு அறிவுரை வழங்குவார்கள். ஸ்டெம்புகளுக்கு பின்னால் நின்று வெறுமெனே பந்தை பிடிப்பது மட்டும் கீப்பர்களின் பணி இல்லை. தோனி இதனை கச்சிதமாக செய்யக்கூடியவர் பகுதிநேர ஸ்பின்னர்களை கொண்டே பல மேட்ச்களில் தோனி ஆட்டத்தின் முடிவுகளை மாற்றியுள்ளார்.
தோனியை தனிப்பட்ட முறையில் நான் மிகவும் மிஸ் செய்கிறேன். ஒரு மூத்த வீரருடன் விளையாடும் போது ஒரு பிணைப்பு இருக்கும். அணியில் அவர் இல்லாதது பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஓய்வு முடிவு என்பது தோனியின் தனிப்பட்ட முடிவு அதனை அவரிடம் விட்டுவிட வேண்டும். அதை விவாதிப்பது பொருத்தமாக இருக்காது. அவர் இன்னும் ஃபிட்டாக இருக்கிறார். அவர் இந்தியாவுக்காக ஆடவேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட விருப்பம். ஒரு ரசிகனாக அவரை நான் மிகவும் நேசிக்கிறேன். அவர் மீண்டும் விளையாடினால் இந்தியாவுக்கு எளிதாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.