தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது 45). சொந்தமாகப் பால்பண்ணை வைத்து நடத்திவருகிறார். சுதா என்கிற மனைவியும், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகளும் குணசேகரனுக்கு உள்ளனர். இவரது மனைவியின் உடன் பிறந்த சகோதரரான பாண்டி (வயது 35) அருகில் வசித்து வருகிறார். மாமன், மைத்துனர் இருவருக்கும் குடிப்பழக்கம் இருந்துவந்துள்ளது. இந்நிலையில், நேற்று திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையில் மது வாங்கிய இருவரும், நேற்று இரவு ஒன்றாகச் சேர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
Also Read: `200 கோடி ரூபாய் வேண்டாம்; 50 கோடி கொடுங்கள்!’ – ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைக்கும் ஓ.பி.எஸ் மகன்
தொடர்ந்து ஆத்திரமடைந்த பாண்டி, தான் வைத்திருந்த கத்தியை எடுத்து, குணசேகரனின் இடது பக்கம் மார்பில் குத்திவிட்டு, ஓடியுள்ளார். ரத்தவெள்ளத்தில் கிடந்த குணசேகரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு, அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். குணசேகரனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். ராஜதானி போலீஸார் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தப்பி ஓடிய பாண்டி, இன்று கைது செய்யப்பட்டார். மது போதையில், மைத்துனன், சொந்த மாமனைக் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டிபட்டி அருகே உள்ள தங்கம்மாள்புரத்தில், டாஸ்மாக்கில் மது வாங்கிக் குடித்துவிட்டு, தகாராறில் ஈடுபட்டதாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது ஒருபுறம் என்றால், இன்று காலை முதலே, தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெண்கள், குழந்தைகள் சாலை மறியல், டாஸ்மாக் முற்றுகை எனப் போராட்டம் நடத்தினர்.
Also Read: `மாற்றுத்திறனாளிகளுக்கு #Corona பாதுகாப்பு கிட்; விலையில்லா மருந்துகள்!’ – அசத்தும் தேனி
தேனி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 97 டாஸ்மாக் கடைகளில், கொரோனா பாதிப்பு குறைந்த பகுதிகளில் உள்ள 30 டாஸ்மாக் கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. இதனால், கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகளில் உள்ளவர்களும், அருகே உள்ள டாஸ்மாக் கடைகளுக்குப் படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை கோடாங்கிபட்டி, சங்கராபுரம், பல்லவராயன்பட்டி, கொடுவிலார்பட்டி ஆகிய இடங்களில் பெண்கள், குழந்தைகள் டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொடுவிலார்பட்டியில் நடந்த போராட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். தங்கள் பகுதியில் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தினர். அவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார், கலெக்டரிடம் உங்கள் கோரிக்கையை வலியுறுத்துங்கள் எனக் கூறினர். அதனை அடுத்து, கலெக்டரைச் சந்தித்து தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டி, மனு கொடுத்தனர்.