பிற மாநிலங்களிலிருந்து ஒடிசா திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கொரோனா இல்லை எனப் பரிசோதனை செய்து உறுதிப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
இந்தியா முழுவதும் கொரோனா பொது முடக்கம் மே 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நீட்டிப்பினால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள் என்பதால், அவர்களைச் சொந்த ஊர்களுக்குக் கொண்டு செல்ல மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துள்ளன. அந்த வகையில் ஒடிசாவைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
அவ்வாறு ஊர் திரும்பும் புலம்பெயர்ந்து தொழிலாளர்களுக்கு கொரோனா இல்லை என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என ஒடிசா உயர்நீதிமன்றத்தில் நாராயண் சந்திரா ஜெனா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஒடிசாவிற்குள் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து, கொரோனா இல்லை என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.