கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்க நிறுவனங்கள் பல முனைப்புக்காட்டி வருகின்றன.
இந்நிலையில் அமெரிக்க மருந்து நிறுவனமான ஃபைசர் ஜெர்மனியின் பயோஎன்டெக் எஸ்.இ நிறுவனத்துடன் இணைந்து கொரோனாவுக்கு எதிராகச் செயல்படக்கூடிய நான்கு தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இதனை 18 முதல் 55 வயதிற்கு உட்பட்டோருக்குச் செலுத்தி பரிசோதனை செய்ய ஃபைசர் நிறுவனம் திட்டமிட்டிருந்தது.
முதற்கட்டமாக இந்தத் தடுப்பூசி கடந்த திங்கள்கிழமை தன்னார்வலர் ஒருவருக்குச் செலுத்தப்பட்டது. அதற்கான முடிவுகள் அடுத்த மாத தொடக்கத்தில் வரும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோல் உலகின் முதல் கொரோனா தடுப்பூசியைக் கண்டுபிடித்துவிட்டதாக இத்தாலி அறிவித்துள்ளது.
தலைநகர் ரோமில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனையான ஸ்பாலன்சானில் நடந்த சோதனை முடிவில் தடுப்பூசி திறம்படச் செயல்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசியை எலியின் உடலில் செலுத்தி சோதனை செய்தபோது கொரோனா வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகள் உற்பத்தியானதாகவும், இதனால் இது நோய்த் தொற்றை எதிர்த்துப் போராடக்கூடியது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த சில மாதங்களில் இந்த மருந்து மனிதர்களுக்கு அளிக்கப்பட்டு சோதனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்திருப்பதாக இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது. குணமடைந்த ஒரு செல் மூலம் குளோனிங் செய்து, நோய் எதிர்ப்புத் திறன் உருவாக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கு மோனோகுளோனல் எனப் பெயரிடப்பட்டிருப்பதாகவும் அந்நாட்டு ராணுவ அமைச்சர் நஃப்தாலி பென்னட் தெரிவித்திருந்தார்