கொரோனா வைரஸால் போடப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருவதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
‘ஃபீவர் நெட்வொர்க்’ அறிமுகப்படுத்திய ‘100 ஹவர்ஸ் 100 ஸ்டார்’ என்ற நிகழ்ச்சியில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கலந்துக் கொண்டார். அப்போது பேசிய அவர் கொரோனா வைரஸால் போடப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருவதாக கூறினார். ஆனால் தொற்றுநோய் காரணமாக போராடுபவர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர் என்றார். ஊரடங்கு போடப்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது என்றும் ஆரம்பத்தில் எனக்கு அதிக சிரமம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய கங்குலி, “இதற்கு முன்னதாக இதுபோன்று வீட்டில் நேரம் செலவிட எனக்கு நேரம் கிடைக்கவில்லை. எனது வாழ்க்கைமுறையில், நான் ஒவ்வொரு நாளும் வேலைக்காக பயணம் செய்ய வேண்டியிருந்தது. கடந்த 30-32 நாட்களாக நான் குடும்பத்துடன் என் வீட்டிலேயே இருக்கிறேன். என் மனைவி, மகள், தாய் மற்றும் சகோதரருடன் நேரத்தை செலவிடுகிறேன்.
“தோனியின் சாதனைகளைப் பேசும் புதிய பாடலை எழுதுகிறேன்” – பிராவோ சர்ப்ரைஸ்
நீண்ட காலத்திற்குப் பிறகு எனக்கு இதுபோன்ற நேரம் கிடைத்துள்ளது. அதனால்தான் நான் அதை அனுபவிக்கிறேன். ஆனால் தற்போதைய சூழ்நிலையைப் பார்த்து நான் ஏமாற்றமடைகிறேன். ஏனென்றால் மக்கள் பலர் வெளி ஊர்களில் சிக்கலில் உள்ளனர். இந்தத் தொற்றுநோயை எவ்வாறு தடுப்பது என்பதைப் புரிந்து கொள்ள நாம் இன்னும் போராடுகிறோம். உலகம் முழுவதும் பரவியிருக்கும் இந்தச் சூழ்நிலை என்னைத் தொந்தரவு செய்கிறது. அது எப்போது, எங்கிருந்து வந்தது என்பது எங்களுக்குத் தெரியாது. நாம் அனைவரும் அதற்கு தயாராக இல்லை” என்று வேதனை பொங்கப் பேசினார்.
மேலும் அவர், “இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பல மரணங்கள் நடந்துள்ளன. இந்த நிலைமையைக் கண்டு நானும் பயப்படுகிறேன். எனக்கு ரேஷன், உணவு கொடுக்க மக்கள் என் வீட்டிற்கு வரும்போது, நான் கொஞ்சம் பயப்படுகிறேன். எனவே இது ஒரு கலவையான உணர்வு. இது விரைவில் முடிவடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்றார்.