கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இருந்த வியாபாரிகள், தொழிலாளர்கள், காவலர்கள் மற்றும் அவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் என 119 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டதையடுத்து அங்கு பணிபுரிந்தவர்கள் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 250 பேர் தங்கள் ஊருக்குத் திரும்பியுள்ளனர். காவல்துறையின் உதவியுடன் அவர்களை அடையாளம் கண்ட சுகாதாரத்துறையினர், செஞ்சி, அரசூர், கப்பியாம்புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் கல்லூரிகள், திண்டிவனம் அரசு பொறியியல் கல்லூரிகளில் தங்க வைத்துள்ளனர்.
இவர்களைத் தவிர விழுப்புரம் மாவட்டத்தைக் கடந்து மற்ற மாவட்டங்களுக்குச் செல்ல முயன்ற 100 பேரையும் மேற்கண்ட 4 மையங்களில் தங்கவைத்து, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் 350 பேருக்கும் படிப்படியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதில் இதுவரை 37 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதேசமயம் பரிசோதனையின் முழு முடிவு வரும்போது தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில், கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் ஊர்களான ஆவுடையார்பட்டு, பஞ்சமாதேவி, கண்டமானடி, திருப்பாச்சனூர், ராம்பாக்கம், கயத்தாறு, குத்தாம்பூண்டி, தும்பூர், பூண்டி, கஸ்பா காரணை, அசோகபுரி உள்ளிட்ட 11 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை இருவர் உயிரிழந்த நிலையில், 27 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். மீதமுள்ள 24 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர் என்பதால் விழுப்புரம் மாவட்டம் கொரோனா சிவப்பு மண்டலத்திலிருந்து இறங்கி ஆரஞ்சு மண்டலமாக மாறியது. தற்போது கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து திரும்பியவர்களால் கொரோனா தொற்று அதிகரித்திருப்பதால் மீண்டும் சிவப்பு மண்டலமாக மாறியிருக்கிறது விழுப்புரம் மாவட்டம்.
இதையடுத்து, `கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து விழுப்புரத்தில் உள்ள தங்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்பியவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திகொள்ள வேண்டும். அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அருகிலுள்ள மருத்துவமனைகளை அணுகி மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து திரும்பியவர்கள் தங்கள் பொறுப்புகளை உணராமல், மக்களுக்கு தொற்று ஏற்படும்படி சுற்றித்திரிந்தால் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவார்கள்’ என்று எச்சரித்திருக்கிறது விழுப்புரம் மாவட்ட காவல்துறை.
கடலூர் மாவட்டம்:
கடலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை நேற்று கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து 600 பேர் சொந்த ஊருக்குத் திரும்பினர். அதில் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த 485 பேர் அங்குள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர். மீதமுள்ளவர்கள் கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவர்களில் நேற்று 7 பேருக்கும் இன்று 9 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. `இன்று மாலை இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம்’ என்று தெரிவிக்கின்றனர் சுகாதாரத்துறை அதிகாரிகள்.