110 வயதான முதியவர் ஒருவர் தனது இத்தனை ஆண்டுக்கால அனுபவத்தில் இப்படி ஒரு ஊரடங்கைப் பார்த்ததில்லை என்று கூறியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் மேற்கு பர்த்வான் மாவட்டத்தில் உள்ள சரஸ்வதிகஞ்ச் கிராமத்தில் வசிப்பவர் ஹரதன் சஹா. இவருக்கு 110 வயது ஆகிறது. இவர் தனது இத்தனை ஆண்டுக்கால வாழ்க்கையில் பல்வேறு வகையான கொள்ளை நோய்களைப் பார்த்துள்ளார். பஞ்சம், பட்டினி, தொற்றுநோய் எனப் பல பேரழிவுகளின் நேரடி சாட்சியம் இவர். இவ்வளவு அழிவுகளும் மனிதனால் உருவாக்கப்பட்டதுதான் என்கிறார்.
ஆனால் இந்த மூத்த குடிமகன் தனது இத்தனை வருட கால அனுபவத்தில் ஒருமுறைகூட இன்றை நடைமுறைப்படுத்தப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கைப் போல ஒரு சம்பவத்தைக் கூட கண்டதில்லை என்கிறார். தனக்கு ஏற்பட்டுள்ள முதல் அனுபவம் இது என்றும் அவர் ஆதங்கப்படுகிறார். இதுதொடர்பாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஊரடங்கு கால அனுபவம் குறித்து 110 வயது முதியவரான ஹரதன் தாத்தா, “1940களில் பேரழிவுக்குக் காரணமாக இருந்த வங்காள பஞ்சத்தையும் 1974 இல் ஏற்பட்ட பெரியம்மை தொற்றுநோயையும் நான் பார்த்திருக்கிறேன். பின்னர் இதற்கிடையில், காலராவும் பரவியது. ஆனால் இப்போது நடந்துகொண்டிருக்கும் ஊரடங்கு கால அனுபவம் எனக்கு முதன்முறையாக ஏற்பட்டுள்ளது. மக்கள் ஒன்றரை மாதங்களுக்கு மேலாகக் கட்டாயமாக வீட்டுக்குள் இருக்க வேண்டி நிலை ஏற்பட்டுள்ளது”என்று கூறியுள்ளார்.
மேற்கொண்டு பேசிய அவர், “நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் பெரியம்மை தொற்றுநோய் ஏற்பட்டபோது எங்கள் கிராமத்தில் சுகாதார வசதி குறைவாக இருந்தது. எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவரைப் பெரியம்மை நோயால் நான் இழந்தேன். ஏனெனில் அந்தக் காலத்தில் மருத்துவமும் அறிவியலும் அவ்வளவு முன்னேறவில்லை. கொரோனா நோய்த் தொற்று ஆபத்திலிருந்து உலகெங்கிலும் உள்ள கோடிக் கணக்கான உயிர்களைக் காப்பாற்ற ஒரு தடுப்பூசி விரைவில் கண்டுபிடிக்கப்படலாம். ஏனெனில் இந்த நாட்களில் மருத்துவ அறிவியல் மிகவும் முன்னேறியுள்ளது. இந்த நோய்க்கான தடுப்பூசியை நாம் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை? மேலும் இறப்புகளைத் தடுக்க விஞ்ஞானிகள் விரைவில் ஒரு தீர்வைக் கண்டுபிடிப்பார்கள் என்று நான் நம்புகிறேன் ”என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.