கொரோனா சிகிச்சை வார்டுகளுக்காக திருமண மண்டபங்கள்!
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்க கூடுதல் வார்டுகளை அமைக்க 15 மண்டலங்களில் உள்ள அனைத்து திருமண மண்டபங்களையும் வழங்குமாறு உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. கொரோனா வார்டுகளுக்கான ஏற்கெனவே பள்ளிகளை மாநகராட்சி கேட்டிருந்த நிலையில், தற்போது திருமண மண்டப உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.
சென்னையில் கொரோனா வார்டுகள் முழுமையாக நிரம்பியதாக நேற்று தகவல் வெளியான நிலையில், மாநகராட்சி இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது.
மருத்துவர்கள், செவிலியர்களுக்கு ராணுவம் மரியாதை!
கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், நர்சுகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொரோனா சிகிச்சை பெறும் மருத்துவமனைகளின் மீது ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
தீயணைப்பு நிலைய அதிகாரிக்கு கொரோனா!
தீயணைப்பு நிலைய அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், திருவல்லிக்கேணி தீயணைப்பு துறை குடியிருப்பில் உள்ளவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
40,000-ஐ நெருங்கும் பாதிப்பு!
இந்தியாவில் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 39,980 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,301 ஆகவும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10,633 ஆகவும் அதிகரித்துள்ளது.
கொரோனா எண்ணிக்கை இரட்டிப்பாக வாய்ப்பு?!
கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மாா்ச் மாதம் 25-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு மே 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இரட்டிப்பாவதற்கான நாள்கள் அதிகரித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்து வருகிறது.