சிவப்பு, ஆரஞ்ச், பச்சை என மூன்று வகையாக பகுதிகள் பிரிக்கப்பட்டு அதற்கேற்ப மத்திய அரசு தளர்வுகளை அறிவித்திருக்கும் நிலையில், கொரோனா இல்லாத மாவட்டமாக இருந்த கிருஷ்ணகிரியில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் மாவட்டங்களான சென்னை, மதுரை, நாமக்கல், தஞ்சை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பூர், ராணிப்பேட்டை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதேபோல், திருவாரூர், வேலூர், காஞ்சிபுரம் ஆகியவையும் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன
தேனி, தென்காசி, நாகை, திண்டுக்கல், விழுப்புரம், கோவை, கடலூர், சேலம், கரூர், தூத்துக்குடி, திருச்சி, திருப்பத்தூர், கன்னியாகுமரி, திருவண்ணாமலை, ராமநாதபுரம், நெல்லை, நீலகிரி, சிவகங்கை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், ஈரோடு, புதுக்கோட்டை, தர்மபுரி என மொத்தம் 24 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலத்தில் இடம் பெற்றுள்ளன.
இதில் கோயம்பேட்டிலிருந்து சென்றவர்களால் அரியலூர், கடலூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில், அந்த மாவட்டங்கள் சிவப்பு மண்டலாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோல, இதுவரை பச்சை மண்டலத்தில் இருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் பணியாற்றிவிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் வந்த 67 வயது முதியவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் பச்சை மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்துக்கு கிருஷ்ணகிரி மாறியுள்ளது.
கோயம்பேடு சந்தையில் இருந்து வேறு மாவட்டங்களுக்குச் சென்ற 29 பேருக்கு கொரோனா