கொரோனாவால் அதிகமானவர்கள் உயிரிழந்த நாடுகளின் பட்டியலில் ஸ்பெயினை பின்னுக்குத் தள்ளி பிரிட்டன் மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளது.
பல்வேறு நாடுகளையும் தனது காலணி ஆதிக்கத்தில் வைத்து ஆட்சி புரிந்த பிரிட்டன் தற்போது கொரோனா வைரஸை சமாளிக்க முடியாமல் திணறுகிறது. கொரோனா தடுப்புப் பணிகளில் பிரிட்டன் அரசு மெத்தனமாகச் செயல்படுகிறது எனத் தொடர்ந்து விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன. குறிப்பாக முதியோர் பராமரிப்பு இல்லங்களில் தான் அதிகமானவர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் அவர்களை அரசு கைவிட்டு விட்டது எனக் குற்றம்சாட்டப்பட்டது.
இந்நிலையில் பிரிட்டன் அரசு கொரோனா பாதிப்பு தொடர்பான புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. மருத்துவமனைகளுக்கு வெளியே பராமரிப்பு இல்லங்களில் நிகழ்ந்த உயிரிழப்புகளையும் இம்முறை அரசு சேர்த்துள்ளது. இதன்படி பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதன் மூலம் உலகிலேயே கொரோனாவுக்கு அதிகமானவர்களைப் பலி கொடுத்த நாடுகளின் பட்டியலில் ஸ்பெயினை பின்னுக்குத் தள்ளி மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளது பிரிட்டன்.
நாட்டில் பொது முடக்கத்தைத் தாமதமாக அறிவித்தது, வைரஸ் பரிசோதனையைத் துரிதப்படுத்தாதது, மருத்துவப் பணியாளர்களுக்கே போதிய பாதுகாப்பு உடைகளை வழங்காதது உள்ளிட்டைவகளே உயிரிழப்புகள் அதிகரிக்கக் காரணம் என போரிஸ் ஜான்சன் அரசு மீது குற்றம்சாட்டுகிறது எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி. இதே நிலை நீடித்தால் பிரிட்டன் இரண்டாமிடத்தை அடையும் என எச்சரிக்கின்றனர் வல்லுநர்கள்.
கொரோனா சிகிச்சை முடிந்து மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ள பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு இது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே நாடு மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் டொமினிக் ராப், பொது முடக்கத்தைத் தற்போதைக்கு நீக்குவதற்கான சாத்தியமே இல்லை எனக் கூறியுள்ளார். கொரோனாவின் இரண்டாவது அலையைப் பிரிட்டனால் எதிர்கொள்ள முடியாது என்றும் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார்.