கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியில் வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசியம் இல்லாத பொருள்களின் தேவைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மின்பொருள் சாதனங்கள், அலைபேசி, மடிக்கணினி, படிப்புக்குத் தேவையான பொருள்கள் என லட்சக்கணக்கில் மக்கள் தங்கள் தேவையை இணையதளங்களில் தேடி ஆர்டர் செய்து வருகின்றனர்.
பேடிஎம் தளம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில், “மக்கள் ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்தே வேலை, படிப்பு என தினம்தோறும் தங்களது அன்றாட செயல்களைச் செய்து வருகின்றனர். வேலையின் காரணமாக அத்தியாவசியம் இல்லாத பொருள்களின் தேவையும் மக்களுக்கு ஏற்படுகின்றது” என தெரிவித்துள்ளது. பேடிஎம் தளத்தில் மட்டும் 3.5 லட்சத்துக்கு அதிகமான பொருள்களைக் கேட்டு இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட மின்னஞ்சல்களை மக்கள் அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அதில் தொலைபேசி, மடிக்கணினி, மின் கடத்தி, செவிப்பொறி (head phone), முடி திருத்தும் கருவி ஆகியவற்றின் தேவைகள் மக்களுக்கு அதிகமாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read: ஆன்லைன் ஷாப்பிங்… இந்த விஷயங்களையெல்லாம் கவனியுங்கள்!
பேடிஎம் தளத்தின் மூத்த துணைத்தலைவர் ஸ்ரீநிவாஸ் மோத்தி இதுதொடர்பாக பேசுகையில், “இந்தியாவில் பெரும்பாலானோர் வீட்டிலிருந்து பணிபுரிவதால் அலுவலக வேலைக்குத் தேவையான பொருள்களின் தேவை அதிகமாகி உள்ளது. அத்தியாவசியத் தேவை பட்டியலின் வரம்பை கூட்ட வேண்டும் என்று கூறியுள்ளனர். உள்துறை அமைச்சகம் முதலில் அத்தியாவசியம் இல்லாத பொருள்களை இணையத்தின் மூலம் விற்பனை செய்ய அனுமதி தந்துவிட்டு பின்பு ரத்து செய்துள்ள நிலையில், மீண்டும் அனுமதி வழங்கக் கோரி அமேசான் இணைய வர்த்தக இந்திய கிளை மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
அமேசானின் இந்தியத் தலைவர் அமித் அகர்வால், “மக்களின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்ய அரசாங்கம் எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். இதன்மூலம் மக்கள் பத்திரமாக வீட்டில் இருக்க முடியும்” என தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். தற்போது இணைய வர்த்தக தளங்கள் மக்களின் அத்தியாவசியத் தேவையைப் பூர்த்தி செய்து வருகின்றது. சமீபத்தில் அத்தியாவசியமில்லாத பொருள்களும் விற்பனை செய்யலாம் என்று அரசாங்கம் அனுமதி வழங்கிய நிலையில், சிறு மற்றும் குறு வணிகர்களின் அமைப்புகள் இம்முடிவை எதிர்த்ததால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.