ஊரடங்கை நீட்டிப்பதா என்பது பற்றி மே 3-க்கு பிறகே முடிவு எடுக்கப்படும் என்று மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்காக ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மாநில முதலமைச்சர்களுடன் மேற்கொள்ளப்பட்ட இரண்டு ஆலோசனைக் கூட்டங்களுக்குப் பின்னர் மே 3ஆம் தேதி வரை தேசிய ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டது.
இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் 3ஆம் கட்ட சமூக பரவலுக்கு செல்வது பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தல் தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமர் மோடி தற்போது காணொலி காட்சி மூலம் மாநில முதலமைச்சர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
இதில் அமலில் உள்ள ஊரடங்கு மே3ம் தேதிக்கு பிறகு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.. மேலும், ஊரடங்கு நீட்டிப்பு பற்றி மே3-க்கு பிறகே முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிகிறது. ஆலோசனையில் அதிகம் பாதித்த மாவட்டங்களில் ஊரடங்கு தொடரலாம் எனவும், கொரோனா பாதிப்பு இல்லாத இடங்களில் ஊரடங்கு தளர்த்தப்படலாம் என்றும் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.