தேனி மாவட்டம் போடியில் இரண்டு கர்ப்பிணி பெண்கள் நடந்து சென்ற விவகாரத்தில் புதிய தலைமுறையின் செய்தி எதிரொலியாக ஆம்புலன்ஸ் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு கர்ப்பிணி பெண்களிடமும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொலைபேசியில் பேசி நடந்ததை கேட்டறிந்து ஆறுதல் கூறினார்.
போடி அரசு மருத்துவமனைக்கு கர்ப்பிணி பெண்ணை அழைத்துவர சென்ற ஆட்டோவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனால் அவர் வீட்டிற்கு நடந்து சென்றார். இதேபோல், ஆட்டோவில் சென்றுக்கொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணை இறக்கிவிட்டு ஆட்டோவை பறிமுதல் செய்த மற்றொரு சம்பவமும் அங்கு நிகழ்ந்தது. இதனால் அந்த கர்ப்பிணி மருத்துவமனைக்கும் அங்கிருந்து வீட்டிற்கும் நடந்தே செல்லும் நிலை ஏற்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக புதிய தலைமுறையில் செய்தி வெளியானது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட இரு கர்ப்பிணி பெண்களிடமும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினார். இதனையடுத்து தேனி மாவட்டங்களில் உள்ள 8 ஒன்றியங்களிலும் கர்ப்பிணி பெண்கள் சேவைக்காக தலா ஒரு ஆம்புலன்ஸ் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.
045 46261039 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸ் சேவையை பெறலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.