கொரோனா லாக்டௌன் நேரத்திலும், வேலூர் மாவட்ட மக்களின் அத்தியாவசிய தேவைக்காக vellore.nic.in என்ற இணையதளம் மூலம் வாகனத்துக்கான அனுமதி வழங்கப்பட்டுவந்தது. இந்த நிலையில், வேலூருக்கு அருகில் உள்ள சென்னை மாநகரம் உள்பட, மதுரை, திருச்சி, ஈரோடு, கோவை, பெங்களூரு ஆகிய பகுதிகளில் முழு ஊரடங்கு பிறக்கப்பட்டுள்ளது.
வேலூர் மக்கள், பெரும்பாலும் இந்த நகரங்களையொட்டிதான் அத்தியாவசிய பயணத்தை மேற்கொள்கிறார்கள். இதன் காரணமாக, மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இனி எக்காரணத்தைக்கொண்டும் வேலூர் மாவட்டத்திலிருந்து மற்ற மாவட்டங்களுக்கும், வெளி மாநிலத்திற்கும் செல்ல வாகன அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
Also Read: `ஸ்விகி மூலம் இறைச்சி விற்பனை..!’ – வேலூர் மக்களுக்காகக் களமிறங்கும் டெலிவரி பாய்ஸ் #corona
அதேபோல், கொரோனா பாதிப்பு காரணமாக கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் நல வாரியம் ஆகியவற்றில் பதிவுசெய்து புதுப்பித்த நபர்களுக்கும் நல வாரியங்களிலிருந்து ஓய்வூதியம் பெறும் நபர்களுக்கும் 15 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு மற்றும் 1 கிலோ பாமாயில் அடங்கிய தொகுப்பு, ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டுவருகிறது.
இதுவரை 33,781 தொழிலாளர்களுக்கு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. தொகுப்பைப் பெறாத 7,309 பயனாளிகள் உடனடியாகத் தங்கள் குடும்ப அட்டை இணைக்கப்பட்டுள்ள நியாய விலைக் கடைக்குச் சென்று பெற்றுக்கொள்ளலாம். தொகுப்பைப் பெற்றுக்கொண்டு ஒப்புதல் ரசீதைப் பூர்த்திசெய்யும்போது, வங்கிக் கணக்கு எண், எம்.ஐ.சி.ஆர் எண் ஆகியவற்றுடன் வங்கிக் கிளையின் பெயரையும் எழுதித் தரவேண்டும் என்று கலெக்டர் சண்முக சுந்தரம் அறிவுறுத்தியுள்ளார்.