காட்பாடியை அடுத்த சேனூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்பாபு (36) என்பவர் வேலூர் மத்திய சிறையில் தலைமை சிறைக் காவலராகப் பணியாற்றுகிறார். பணி நேரம் முடிந்து வேலூர் அண்ணாசாலை வழியாக பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். ஊரீஸ் கல்லூரி அருகே சென்றபோது, திடீரெனப் பறந்துவந்த பட்டத்தின் மாஞ்சா நூல் அவரின் கழுத்தில் சிக்கியது. இதில், கழுத்து அறுபட்டு பைக்கிலிருந்து சாலையில் விழுந்த சுரேஷ்பாபு வலியில் துடித்தார்.

சி.எம்.சி மருத்துவமனை

அந்த வழியாகச் சென்ற மற்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்து உடனே அருகில் உள்ள வேலூர் தெற்கு காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து சுரேஷ்பாபுவை மீட்டு சி.எம்.சி மருத்துவமனையில் சேர்த்தனர். முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு அந்தக் காவலர் நலமுடன் இருக்கிறார். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து மாஞ்சா நூலில் பட்டம் விட்ட நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.

இந்த நிலையில், பாணாக் காத்தாடி விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூர் மாவட்ட எஸ்.பி பிரவேஷ்குமார் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சிலர் பொழுது போக்கிற்காக வீட்டு மாடியிலிருந்து பட்டம் விடுகிறார்கள். சாதாரண நூல்கள் பயன்படுத்துவதைத் தவிர்த்து கண்ணாடித் துகள்களை அரைத்து மாஞ்சா போடப்பட்ட நைலான் நூலைப் பயன்படுத்துகிறார்கள்.

வேலூர் எஸ்.பி பிரவேஷ்குமார்

இது, சட்டப்படி குற்றம். அவ்வாறு மாஞ்சா நூலில் பட்டம் விடும் நபர்கள் மீது குற்ற வழக்குப் பதியப்படும். சில நேரங்களில், பட்டம் அறுந்து சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளின் கழுத்தில் சிக்கி அவர்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை உருவாகிறது. பட்டம் விடும் நபர்கள் குறித்து பொதுமக்கள் 0416-2258532, 0416-2256966, 0416-2256802 ஆகிய தொலைப்பேசி எண்களைத் தொடர்பு கொண்டு எஸ்.பி அலுவலகத்தில் தகவல் தெரிவிக்கலாம்’’ என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.