மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் துறவிகள், கிராம மக்களால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ரிபப்ளிக் தொலைகாட்சியில் விவாவதம் ஒன்று நடைபெற்றது. அதில், இந்த கும்பல் கொலையை கண்டித்து ஏன் சோனியா காந்தி இன்னும் கருத்து தெரிவிக்காமல் மௌனம் காக்கிறார் என்று கேள்வியெழுப்பினார் ரிபப்ளிக் ஆசிரியர் அர்னாப். மேலும், சோனியா காந்தி மீது பல்வேறு கேள்விகளை எழுப்பியதாக தெரிகிறது.
இதனையடுத்து சோனியாகாந்தி மீது அவதூறு பரப்பும் விதமாக பேசியதாக அர்னாப் கோஸ்வாமி மீது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் புகார் அளித்துள்ளனர். இதனிடையே, நேற்று முன்தினம் இரவு பணி முடித்தபின் ஸ்டூடியோவில் இருந்து வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த போது அர்னாப் கோஸ்வாமி மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் முகமூடி அணிந்துகொண்டு வந்து அவர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் குறித்து போலீசார் ஐபிசி 341, 504 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்தியதாக 2 பேரை கைது செய்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பாக வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ள அர்னாப், இது காங்கிரஸ்காரர்களின் வேலைதான் எனவும் தனக்கும், தனது குடும்பத்திற்கும் ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு சோனியா காந்தியே காரணம் எனவும் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், தனக்கு எதிராக பதியப்பட்டுள்ள புகார்களை தள்ளுபடி செய்யும் படி அர்னாப் கோஸ்வாமி உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார். இதனை உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு விசாரிக்கவுள்ளது. அர்னாப் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் சந்திரசூட், எம்.ஆர்.ஷா ஆகியோர் கொண்ட பெஞ்ச் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்துகிறது.
“சர்வதேச போட்டிகளில் விளையாடும் உடற்தகுதி தோனிக்கு உண்டு” – மைக்கெல் ஹஸ்ஸி