வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பொருட்கள் கொண்டு வர தடை விதிக்கக்கோரிய மனுவுக்கு மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பிற மாநிலங்களில் இருந்து பொருட்களை கொண்டு வர அனுமதியளித்து தமிழக அரசு, ஏப்ரல் 20ம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா சமூக பரவலை தடுக்க, வெளி மாநிலங்களில் இருந்து பொருட்களை கொண்டு வர தடை விதிக்கக் கோரி ஐக்கிய தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர் மாரியப்பன் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், வெளி மாநிலங்களிலிருந்து பொருட்களை கொண்டு வரும்போது, அதன் மூலம் கொரோனா தொற்று பரவல் தீவிரமாக வாய்ப்புள்ளதாகவும், அதனால் தற்போது தொற்று பரவலை தடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் வீணாகக் கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், சமூக பரவலை தடுக்க வெளி மாநிலங்களில் இருந்து பொருட்கள் கொண்டு வரும்போது, முறையான பாதுகாப்பு நடைமுறைகளை உறுதி செய்ய உரிய விதிமுறைகளை வகுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வு, மனுவுக்கு மே 7ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, மத்திய – மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.