கடந்த சில தினங்களுக்கு முன்னர் துபாய் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி ஹெண்ட்-அல் காஸ்மி என்பவர், சவுரப் உபத்யாய் எனும் இந்திய தொழில் அதிபரின் மதவெறுப்பு ட்விட்டைக் குறிப்பிட்டு, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் இங்கே மதவெறுப்புப் பிரசாரத்துக்கு இடமில்லை எனவும் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து பல அரபுலக நாடுகளின் முக்கியத் தலைவர்கள், மக்களிடையே மதவெறுப்பை ஊக்குவிக்கும் வகையில் யாரேனும் செயல்பட்டால் அதற்கான தகுந்த ஆதாரங்களைத் தருமாறும் அந்த ஆதாரங்களைக் கொண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் கூறியிருந்தனர். அதன் தொடர்ச்சியாக, மதவெறுப்பைத் தூண்டும் வகையில் ட்வீட் செய்த அமீரக வாழ் இந்தியர்கள் பலர் மன்னிப்பு கேட்கும் பதிவுகளைத் தங்கள் கணக்குகளில் வெளியிட்டிருந்தனர்.
கர்நாடக மாநிலத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கபட்டுள்ள, தேஜஸ்வி சூர்யா கடந்த சில வருடங்களுக்கு முன்னர், அரபுலக பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ட்வீட் செய்திருந்தார்.
Also Read: தாயன்புடன் போலீஸாருக்கு கூல்டிரிங்ஸ் வழங்கிய பெண்… சர்ப்ரைஸ் கொடுத்த ஆந்திர டிஜிபி!
இதை இப்பொழுது கவனித்த குவைத்தின் சர்வதேச வழக்கறிஞரும் குவைத் மனித உரிமைக் கழகத்தின் தலைவருமான முஜ்பில் அஷ்ஷரிக்கா, இந்தியப் பிரதமர் மோடியைத் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டு, “மரியாதைக்குரிய இந்திய பிரதமர் அவர்களே, அரபு நாடுகளுடனான இந்திய உறவு என்பது மரியாதையின் அடிப்படையிலானது. நீங்கள் உங்கள் பாராளுமன்ற உறுப்பினரை, எங்கள் பெண்களை இழிவுபடுத்த அனுமதித்து உள்ளீர்களா? நாங்கள் தேஜஸ்வி சூர்யா என்பவரின் இழிவான ட்வீட்டுக்கு எதிராக உங்களின் விரைவான நடவடிக்கையை எதிர்பார்க்கிறோம்” எனக் கூறியிருந்தார்.
அதைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகத்தின் அதிகாரபூர்வ பக்கத்தில், “ஒற்றுமையும் சகோதரத்துவமுமே நமது நடத்தையாக இருக்க வேண்டும், கோவிட்-19 சாதி நிறம், இனம் நிறம் எனப் பாகுபாடு பார்த்து வருவதில்லை” எனப் பிரதமர் மோடி பேசியதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து அந்தப் பதிவை குறிப்பிட்டு ஐக்கிய அமீரகத்தின் இந்தியாவுக்கான தூதர் பவன் கபூர் அமீரக வாழ் இந்தியர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
அதில், “இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் எல்லாத் தளங்களிலும், வலுவான பாகுபாடு இல்லாத தன்மையை பகிர்ந்து கொள்ளக் கூடியன. பாகுபாடு என்பது நமது நீதிக்கும் சட்டத்துக்கும் புறம்பானது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கக் கூடிய இந்தியர்கள் இதை உணர்ந்து செயல்பட வேண்டும்’’ என இந்திய தூதர் பவன் குமார் குறிப்பிட்டுள்ளார். தற்போது தேஜஸ்வி சூர்யா தன்னுடைய அந்த ட்விட்டை நீக்கியிருக்கிறார்.