அமெரிக்காவில் பிறநாட்டினர் குடியேறத் தடை…!
அமெரிக்காவில் பிறநாட்டினர் குடியேறுவதை தற்காலிகமாக நிறுத்திவைப்பதற்கான ஆணை கையொப்பமாக உள்ளது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில், அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “கண்ணுக்குத் தெரியாத எதிரியின் தாக்குதலாலும் அமெரிக்க குடிமக்களின் வேலையைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தாலும் அமெரிக்காவில் மக்கள் குடியேறுவதை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டிய திட்டத்தில் கையொப்பமிட உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம்!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,336 பேருக்குப் புதிதாக கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 18,601 ஆக அதிகரித்துள்ளது. இதில் 14,759 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 590 பேர் இந்த வைரஸ் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர். அதேநேரம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,842-லிருந்து 3,252 ஆக உயர்ந்துள்ளது நம்பிக்கை அளிக்கக்கூடிய செய்தியாக உள்ளது.
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,81,165 ஆகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,70,370 ஆகவும் உள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 6,46,248 ஆக உயர்ந்துள்ளது.