கொரோனா வைரஸ் பரவலால் இதுவரை இல்லாத அளவில் உலகம் முழுவதிலும் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் காரணமாக முதன்முறையாக கச்சா எண்ணெய் விலை பூஜ்ஜியத்துக்கும் கீழே சரிந்துள்ளது. இதனால் வணிகர்கள் கச்சா எண்ணெய் விநியோகத்தைத் தவிர்த்து வருகிறார்கள்.
அமெரிக்கப் பங்குச் சந்தை நேற்று தொடங்கியது முதலே West Texas Intermediate படுமோசமான சரிவை சந்தித்து வந்தது. இந்த நிலையில், ஒப்பந்தங்களில் பூஜ்ஜியத்துக்கும் கீழே விலை கொடுக்கப்பட்டுள்ளன. 1946-க்குப் பிறகான எல்லாக் குறைந்த விலைகளையும்விட மிகக்குறைவாக தற்போதைய மே மாதத்துக்கான ஒப்பந்தங்கள் உள்ளன. ஒரு பேரல் எனப்படும் 158.98 லிட்டர் கச்சா எண்ணெயின் விலை ஒரு அமெரிக்க டாலருக்கும் கீழே சென்றது. தொடர்ந்து விலை வீழ்ச்சியடைய, கச்சா எண்ணெயின் விலை பூஜ்ஜியத்துக்கும் கீழே சென்றது. அதாவது, -39.14 அமெரிக்க டாலர்கள் என விலை வீழ்ந்தது.
மே மாதத்துக்கான ஒப்பந்தங்கள் முடிவடையும் நிலையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள கச்சா எண்ணெயை சேமித்து வைக்கப்போதிய இடவசதி இல்லாத காரணத்தால் விற்க வேண்டிய கட்டாயத்தில் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. ஆனால், பயணக்கட்டுப்பாடுகள் இருக்கும் இச்சூழலில் போக்குவரத்து முடங்கியுள்ளதால் தேவையும் குறைந்துள்ளது. வாங்குபவர்கள் இன்றி எண்ணெய் சந்தைகளும் சேமிப்புக் கிடங்குகளும் நிறைந்துள்ளன. இது வணிகர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன் விளைவாகவே விலை பூஜ்ஜியத்துக்கும் கீழே சென்றுள்ளது. இதுபற்றி, சந்தைகள் தொடர்பான நிபுணர் மைக்கேல் மெக்கார்த்தி, உற்பத்தி செய்த கச்சா எண்ணெயை விற்க உற்பத்தி நிறுவனங்களே காசு கொடுக்க வேண்டிய அசாதாரண பொருளாதார சூழல் நிலவுவதாகத் தெரிவித்தார்.
Also Read: சரியும் கச்சா எண்ணெய் விலை; குறையும் பெட்ரோலியப் பொருள்களின் நுகர்வு… மத்திய அரசின் திட்டம் என்ன?
வர்த்தக நிறுவனங்கள் தற்போது ஜூன் மாத விநியோகத்துக்கான ஒப்பந்தங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். இதற்கான பங்குகளில் ஒரு பீப்பாய் $20.43 டாலர்களோடு நியுயார்க்கில் முடிந்துள்ள நிலையில் தற்போது $21 டாலர்களைக் கடந்து வருகிறது. சர்வதேச அளவுகோலான Brent கச்சா எண்ணெய், ஜூன் விநியோகத்துக்காக ஒரு பீப்பாய் $25.61 டாலரில் உள்ளது. இது 0.15% அதிகரித்துள்ளது. அமெரிக்க கச்சாவின் சரிவு திங்களன்று ஓக்லஹோமாவின் குஷிங்கில், WTI சேமிப்பு வசதியால் தூண்டப்பட்டது. அதேபோல் மே ஒப்பந்தத்தின் காலாவதிக்கு முன்னர் வர்த்தகர்கள் தங்கள் நிலைகளை மூடிவிட்டனர்.
ஏஞ்செல் புரோக்கிங் நிறுவனத்தின் துணைத் தலைவர் அனுஜ் குப்தா கூறுகையில், “கரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரச் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதால், வரலாற்றிலேயே முதல் முறையாக அமெரிக்காவில் பெட்ரோலியக் கச்சா எண்ணெய் விலை மைனஸ் அளவில் சென்றுள்ளது” எனத் தெரிவித்தார்.
உலகம் முழுவதிலும் கொரோனா தொற்றைத் தடுக்க பயணக்கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக சமீபத்திய வாரங்களில் எண்ணெய் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. சவுதி அரேபியாவுக்கும் ரஷ்யாவுக்குமான விலை மோதலில் இந்த எண்ணெய் விலை வீழ்ச்சியின் நெருக்கடி இன்னும் மோசமடைந்தன. ரியாத் மற்றும் மாஸ்கோ இந்த சர்ச்சையின் கீழ் டாப் 10 தயாரிப்பாளர்களுடன் சேர்ந்து, இந்த மாத தொடக்கத்தில் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 10 மில்லியன் பீப்பாய்கள் உற்பத்தியைக் குறைப்பதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன. ஆனாலும் விலை தொடந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. இன்னமும் உற்பத்தியைக் குறைக்க வேண்டும் என்றும் சேமிப்புக் கிடங்குகள் தங்களது முழு கொள்ளளவை எட்டியுள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.
Also Read: கச்சா எண்ணெய் கடும் வீழ்ச்சி!