கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் தீவிரமாகப் பரவி வருகிறது. ஊரடங்கு அமலில் இருந்தாலும் பல்வேறு நிபந்தனைகளுடன் மக்கள் தங்களது தேவைகளுக்காக வெளியில் சென்று வருகின்றனர். மக்களைப் பாதுகாப்பதற்காகவும், அரசின் உத்தரவுகளை மக்கள் முறையாகப் பின்பற்றுகிறார்களா என்பதைக் கண்காணிக்கவும் நாடு முழுவதும் காவல்துறையினர் இரவு பகல் பாராது பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், பஞ்சாப் மாநிலம், லூதியானா மாவட்டத்தின் காவல் உதவி ஆணையாளர் அனில் குமார் கோலி, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்திருக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா தொற்று அறிகுறிகளுடன் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த காவல் உதவி ஆணையாளருக்குக் கடந்த 13-ம் தேதி லூதியானாவின், சத்குரு பார்த்தப் சிங் மருத்துவமனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த காவல் உதவி ஆணையர் திடீரென உயிரிழந்தார். இந்நிலையில், அவரது மரணம் தொடர்பாகப் பேசிய மருத்துவமனை நிர்வாகத்தினர், பல்வேறு உடல் உறுப்பு செயலிழப்பால் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
Also Read: `ஆம்புலன்ஸில் ஏற்றும்போதே உயிர் இல்லை!’ -சிறுவனை அடித்தே கொன்ற தாய்; கோவை அதிர்ச்சி
இந்தநிலையில், உதவி காவல் ஆணையரின் மனைவிக்குக் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார். மேலும், காவல் ஆணையருடன் நேரடித் தொடர்பில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர், டிரைவர் என நால்வர் மருத்துவமனை தனிமைப்படுத்துதலில் இருந்து வருகின்றனர்.“பாதிப்பு அதிகம் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் நேரடியாக மக்களிடம் களப்பணியில் ஈடுபட்ட காவல் உதவி ஆணையருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் வருத்தமளிப்பதாக இருக்கிறது” என அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
மேலும், குடும்பத்தினருக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீட்டு நிதியாக அவர் அறிவித்ததுடன், கொரோனா வைரஸ் பணியிலிருந்து கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழக்கும் எல்லா தரப்பு அதிகாரிகளின் குடும்பங்களுக்கும் 50 லட்சம் ரூபாய் அளிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். இதனிடையே காவல் ஆணையர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியும் வருத்தமும் அளிப்பதாக இருக்கிறது, என மத்திய அமைச்சர் சோம் பிரகாஷ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.