ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடத்துவது ஆபத்து என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததையடுத்து மார்ச் 29-ஆம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் போட்டிகள் ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்பு, இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட காரணத்தால் திட்டமிட்டப்படி ஐபிஎல் போட்டிகள் நடைபெறவில்லை. இதனையடுத்து ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ தெரிவித்தது.
இந்நிலையில் இலங்கையில் ஐபிஎல் போட்டிகள் நடத்த தயாராக இருக்கிறோம் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு பேசிய இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஷமி சில்வா, கொரோனா அச்சுறுத்தலில் இருந்து இந்தியாவிற்கு முன்னதாகவே இலங்கை மீண்டுவிடும். எனவே இங்கு கிரிக்கெட் போட்டிகளை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் எழுத உள்ளோம் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இது குறித்து இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் கருத்து தெரிவித்துள்ளார், அதில் “ஐபிஎல் போட்டிகளை இலங்கையில் நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை அளவிலேயே மட்டுமே இருக்கிறது. எனக்கு தெரிந்து இதுவொரு நிரந்தர தீர்வாகாது. முதலில் கொரோனா வைரஸ் பாதிப்புகளை உலகெங்கிலும் நீக்கப்பட வேண்டும், அதில் இலங்கையும் விதிவிலக்கல்ல. இலங்கையில் போட்டி நடந்தால் வெளிநாட்டு வீரர்கள் இங்கு வருவார்கள். அவர்களை இங்கு தனிமைப்படுத்த வேண்டும். இது மிகப் பெரிய ஆபத்தை வீர்ரகளுக்கும் நாட்டு மக்களுக்கும் ஏற்படுத்தும்” என தெரிவித்துள்ளார்.