குடும்பம், குழந்தைகளை மறந்து அனுதினமும் போதையில் மூழ்கியிருந்த நபர் இன்று மற்றவர்களின் சுகாதாரம் காக்க மாஸ்க் விற்று வருகிறார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி களப்பக்காட்டை சேர்ந்தவர் ராமையா. தையல் தொழிலாளியான இவரது மகன் சக்திவேல், வட்டாட்சியர் அலுவலம் முன் அமர்ந்து பத்திரங்கள் எழுதிக் கொடுக்கும் வேலை பார்த்து வருகிறார். குடி பழக்கத்திற்கு அடிமையான சக்திவேல், வேலையை முடிந்தவுடன் நாள்தோறும் குடித்து விட்டு சாலையோரங்களில் போதையில் நடமானடி விழுந்து கிடப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.
ஆனால் அவரது வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியது கொரோனா. ஊரடங்கு அமலில் உள்ளதால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மது கிடைக்காமல் திணறிய சக்திவேல் கொஞ்சம், கொஞ்சமாக அதில் இருந்து மீண்டு, தந்தை தைத்து தரும் முகக் கவசங்களை விற்கத் தொடங்கியுள்ளார்.
நாளொன்றுக்கு 20 முகக் கவசங்கள் விற்றாலும் மன நிறைவோடு மகிழ்ச்சியாக வாழ்வதாகவும் மீண்டும் மதுக்கடை திறந்தாலும் தனக்கு அந்த சிந்தனை வராது என அவர் கூறுகிறார். மது பழக்கத்தில் இருந்து தங்களது மகன் மனம் திருந்தியது நிம்மதியளிப்பதாக கூறும் சக்திவேலின் பெற்றோர், தமிழக அரசு மதுக்கடைகளை தொடர்ந்து மூடிவிட்டால் பலரது வாழ்க்கையில் ஒளியேற்ற முடியும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.