ஊரடங்கு காலத்தில் ஃபிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் நிறுவனங்களில் அத்தியாவசியமற்ற பொருட்களை விற்பதற்கான தடை தொடரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு தீவிரமடைந்ததை தொடர்ந்து முதல் கட்டமாக அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டாலும் ஏப்ரல் 20-க்கு பிறகு சில நிபந்தனைகளுடன் தளர்வுகள் இருக்கும் எனவும் அதுகுறித்து வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. இருப்பினும், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள இடங்கள், பாதிப்பு உள்ளவர்கள் வசித்ததற்காக முடக்கப்பட்ட பகுதிகளுக்கு தளர்வுகள் பொருந்தாது. ஏப்ரல் 20-க்கு பின் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம்; ஆனால் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய அரசு அறிவித்த சில தளர்வுகள் நாளை அமலுக்கு வரும் நிலையில், ஆன்லைன் வணிக நிறுவனங்கள் அத்தியாவசியமற்ற பொருட்களை விற்பனை செய்வதற்கான தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமில்லாத ஹாட்ஸ் பாட் ஆகாத பகுதிகளில் மொபைல் போன், டிவி உள்ளிட்ட பொருட்களை விநியோகம் செய்யலாம் என்ற தவறான தகவல்கள் பரவியதை அடுத்து மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.