திருப்பத்தூர் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை அமைச்சர் நிலோபர் கபில் சந்தித்த நிலையில் அதில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பிய வாணியம்பாடியை சேர்ந்த 8 பேரை மருத்துவமனையில் சேர்த்த அதிகாரிகள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 52 பேரை தனியார் கல்லூரி மற்றும் தனியார் திருமண மண்டபங்களில் தனிமைப்படுத்தி வைத்திருந்தனர். பரிசோதனை முடிவில் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்களுடைய உறவினர்களான 12 பேருக்கு மட்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மீதமுள்ள 40 பேரை பரிசோதனைக்கு உட்படுத்தாமல் ஆறு நாட்கள் மட்டும் தனிமைப்படுத்தி வைத்திருந்தனர்.
ஏப்., 20-க்கு பிறகான தளர்வுகள்.. எவையெல்லாம் இயங்கலாம்..? எதற்கெல்லாம் தடை..?
இதனைத்தொடர்ந்து கடந்த 9-ஆம் தேதி அமைச்சர் நிலோபர் கபில், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து 40 பேரை குறைந்தபட்சம் 14 நாட்கள் கண்காணிப்பில் வைத்திருக்காமல் அனுப்பியது குறித்து கேள்வி எழுந்த நிலையில், அனைவருக்கும் கடந்த 11-ஆம் தேதி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?
கடந்த 13ஆம் தேதி வந்த ஆய்வின் முடிவில் அவர்களில் வாணியம்பாடி கோட்டை பகுதியை சேர்ந்த 48 வயது பெண்ணுக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அமைச்சர் நிலோபர் கபில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சூழலில், கொரோனா தொற்று ஏற்பட்ட பெண்ணை வழியனுப்பி வைத்த இரண்டு நாட்களுக்கு பிறகு, அதாவது கடந்த 11-ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நிலோபர் கபில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.