கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக 4-வது முறையாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அதில், “கொரோனாவை ஒழிக்க நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து போராடி வருகிறோம். மக்களின் ஒத்துழைப்பால் கொரோனாவை கட்டுப்படுத்த முடிந்தது. ஊரடங்கால் சிலருக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை புரிந்து கொண்டுள்ளேன். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மக்கள் அனைவரும் ராணுவ வீரர்களை போன்று செயல்பட்டு வருகின்றீர்கள். தமிழ் புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளை மக்கள் வீட்டில் இருந்து கொண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. மக்களின் ஒத்துழைப்புடன் பெரிய அளவிலான பாதிப்புகளை தவிர்த்து வருகிறோம். சவால் நிறைந்தது வாழ்க்கை என்பதற்கு சட்ட மேதை அம்பேத்கரின் வாழ்க்கையே உதாரணம். 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது இந்தியாவில் 500 பேருக்கு பாதிப்பு இருந்தது. உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இந்தியா சிறந்து விளங்குகிறது.
உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால் இன்னும் பாதிப்பு அதிகமாக இருந்திருக்கும். ஊரடங்கும் சமூக விலகலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியா எடுத்து வரும் தடுப்பு நடவடிக்கைகளை பிற நாடுகள் பாராட்டியுள்ளன. இந்தியாவில் கொரோனா கட்டுக்குள் இருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3-ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது.” எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “வரும் ஊரடங்கு காலத்திலும் மக்கள் தொடர்ந்து கட்டுப்பாட்டுடன் விதிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும். கொரோனா பரவும் பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு அவசியமாகிறது. கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பிறகு சில நிபந்தனைகளுடன் கட்டுப்பாடுகளை தளர்த்த வாய்ப்பு உள்ளது. அடுத்த வாரம் என்பது கொரோனாவை தடுக்கும் பணியில் முக்கியத்துவம் வாய்ந்தது.
கொரோனா வைரஸால் ஒருவர் உயிரிழந்தாலும் அதுமிகவும் வேதனை தரக்கூடியது. ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாளை விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும். கொரோனாவுக்காக தற்போதைய சூழலில் நாம் அமைத்துள்ள பாதுகாப்பு அரணை அகற்ற முடியாது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீறப்பட்டால் தளர்வுகள் ரத்து செய்யப்படும். ஏழை மக்களின் நிலையை கருத்தில் கொண்டு சில தளர்வுகள் நடைமுறைக்கு வரும். முகக் கவசங்களை வீட்டிலேயே தாயரித்து பயன்படுத்தலாம். aarogya setu செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். நிறுவனங்கள் ஊழியர்கள் யாரையும் பணியில் இருந்து நீக்க வேண்டாம்.” எனப் பேசினார்.