டிசம்பர் 2019 முதல் உலக அளவில் மக்களைத் தாக்கி வரும் இந்தப் புதிய கொரோனா வைரஸ் சீனாவில் உள்ள வுகான் நகரத்தில் ஆரம்பித்த தொற்று. இது நாம் அனைவருமே அறிந்ததுதான் என்றாலும் சீன அரசு இந்தத் தொற்று தங்களிடமிருந்துதான் பரவியது என்ற செய்தியைக் கூறும் வகையில் வெளிவந்த ஆராய்ச்சிப் பதிவுகளை, பல்கலைக்கழகங்களின் வலைதளங்களில் இருந்து நீக்கச் சொல்லியுள்ளது. இதன் மூலம் சீனா, COVID-19 நோய் அரும்பியதன் உண்மையை மறைக்க முயல்கின்றதா? என்ற குற்றச்சாட்டு சீனாவின் மேல் எழுந்துள்ளது.
சீனாவைச் சேர்ந்த இரண்டு புகழ்பெற்ற பல்கலைக் கழகங்கள், COVID -19 எவ்வாறு முதலில் வந்தது என்பது குறித்து தங்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளை, சமீபத்தில் தங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிட்டு பின்பு அதை நீக்கியுள்ளன. சீனாவில் ஆரம்பித்த இந்த வைரஸ் தொற்றால்தான் உலக அளவில் ஒரு லட்சம் பேருக்கு மேல் இறந்துள்ளனர் என்ற செய்தி மேலும் பரவாமல் இருப்பதற்காக இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
வுகான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரென்மின்(Renmin) மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், COVID- 19 தோன்றல் குறித்த எங்கள் ஆராய்ச்சி முடிவுகளுக்கு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ஒப்புதல் தேவை என்பதால் தாங்கள் அந்தப் பதிவை நீக்கியுள்ளதாகக் கூறுகின்றனர். அதேபோல் சீன புவிஅறிவியல் பல்கலைக்கழகம், ஷாங்காயில் உள்ள Fudan பல்கலைக்கழகமும், தங்கள் ஆராய்ச்சி முடிவுகளை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை ஆராய்ந்து ஒப்புதல் வழங்க வேண்டியுள்ளதால், தங்கள் பதிவை நீக்கியதாக தெரிவித்துள்ளன.
இது குறித்து லண்டனில் உள்ள SOAS china Institude ன் இயக்குநர் Steve Tsang, “சமூக நலம், பொருளாதாரம் ஆகியவற்றைவிட கொரோனா வைரஸைப் பற்றி என்ன கருத்துகள் கூறப்படுகின்றது என்பது முக்கியம்” என்று கூறியுள்ளார். பல்கலைக்கழகம் ஆராய்ச்சிக்கு ஒப்புதல் அளித்த பின்பு அது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை துறைக்கு அனுப்ப வேண்டும். அவர்களின் ஒப்புதலுக்குப் பின்பு ஆராய்ச்சி முடிவுகள் பிரசுரிக்கப்பட வேண்டும் என்று புதிய வழி முறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
சீனாவின் அதிபர் ஜீ ஜின்பிங், “இந்த வைரஸின் தொற்று எவ்வாறு ஆரம்பித்தது என்று தெளிவாகக் கூற இயலாது” என்று கூறியுள்ளார். சீனாவில் வுகான் நகரத்தில் உள்ள ஒரு கடல்வாழ் உணவுகள் விற்கப்படும் மார்க்கெட்டிலிருந்து இந்தத் தொற்று ஆரம்பித்ததாகக் கூறப்படுகிறது. ஆராய்ச்சியாளர்கள் இந்த வைரஸ் வௌவாலிலிருந்து, இடைநிலையாக வேறு ஒரு உயிரினத்துக்குப் பரவி, பின்பு மனிதர்களைத் தாக்கி இருக்கலாம் என்று கருதுகின்றனர்.
இது குறித்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Monash பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் Kevin carrico, “சீனா இந்த நோய்த் தொற்றால் ஏற்பட்ட இழப்புகளை மறைத்து, அரசாங்கம் அனைத்தையும் சரிசெய்துவிட்டதாக காட்ட வேண்டும் என்று எண்ணுகிறது” என்று கருத்து தெரிவித்துள்ளார். அவர்கள் எதை மூடி மறைக்க முயன்றாலும், உண்மை நாம் அனைவரும் அறிந்தது தானே.