கொரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றாகத்தான் இதுவரையில் திருப்பூர் மாவட்டம் இருந்து வந்தது. ஆனால், நேற்று மாலை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட அறிவிப்பு, அந்த நிலைமையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்டது. இதனால் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது திருப்பூர். ஒரேநாளில் புதிதாக 35 பேருக்குக் கொரோனா பாசிட்டிவ் ரிசல்ட் வந்திருப்பதே இதற்குக் காரணம்.
திருப்பூர் மாவட்டத்தில் ஏப்ரல் 11-ம் தேதி வரை 25 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இவர்கள் அனைவரும் டெல்லிக்குச் சென்று வந்தவர்கள் என்று மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.
இந்நிலையில், நேற்று ஒரேநாளில் புதிதாக 35 பேருக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இந்த 35 பேரில் ஒரு வயது ஆண் குழந்தை, 3 வயது குழந்தைகள் இரண்டு பேர், 4 வயதுக் குழந்தைகள் இருவர், 5 வயது குழந்தை, 8 வயதுக் குழந்தைகள் மூன்று பேர், 10,12,14 & 17 வயதில் நான்கு குழந்தைகள் என மொத்தம் 13 குழந்தைகளுக்குத் தொற்று ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளும் இதில் இருக்கிறார்கள். இந்தக் குழந்தைகள் உட்பட, நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 35 பேரும் டெல்லி சென்று வந்தவர்களின் மனைவி, குழந்தைகள், பெற்றோர்தான் என மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
Also Read: ஒரே நாளில் 35 பேருக்கு கொரோனா; 60 ஆக உயர்ந்த எண்ணிக்கை! – கலங்கும் திருப்பூர்
‘டெல்லிக்குச் சென்று வந்தவர்கள் குழந்தைகளுக்கு முத்தம் கொடுத்து கொஞ்சியதால் இந்தத் தொற்று ஏற்பட்டிருக்கலாம்’ என மருத்துவர்கள் கருதுகின்றனர். புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்ட குழந்தைகள் உட்பட 35 பேரையும் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.
விவரமறியாத பிஞ்சுக் குழந்தைகளை தனி வார்டில் வைத்து எப்படித் தனிமைப்படுத்துவது என சுகாதாரத்துறை அதிகாரிகள் கவலையுற்றுக் கிடக்கின்றனர். இன்றைக்குத் தொற்று பாதித்த 35 பேரும் வசித்த பகுதிகள் சீல் வைக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட உள்ளன. மேலும், அவர்களின் குடும்பத்தார், உறவினர்கள், தொடர்பிலிருந்தவர்கள் எனப் பலரும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட இருக்கின்றனர்.
#GameCorner
கொரோனா அச்சம், லாக்-டவுண் பரபரப்பு, வொர்க் ஃப்ரம் ஹோம் அலப்பறைகள் அத்தனைக்கும் மத்தியில் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இதோ ஒரு குட்டி கேம்.