நாடு முழுவதும் தற்போது அமலில் உள்ள ஊரடங்கை மேலும் நீட்டிக்க பிரதமர் மோடி எடுத்துள்ள முடிவு சரியானது என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கெஜ்ரிவால் தன்னுடைய ட்விட்டரில், “ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்ற பிரதமரின் முடிவு சரியானது. இன்று மற்ற வளர்ந்த நாடுகளை காட்டிலும் இந்தியாவில் நிலை மேலானதாக உள்ளது. ஏனெனில் அவர்களுக்கு முன்பாக நாம் ஊரடங்கை தொடங்கிவிட்டோம். தற்போது ஊரடங்கை திரும்பப் பெற்றால் எல்லா பலன்களையும் இழக்க நேரிடும். அதனால், ஊரடங்கை நீட்டிக்க வேண்டியது முக்கியமானது” என்று குறிப்பிட்டுள்ளார்.
PM has taken correct decision to extend lockdown. Today, India’s position is better than many developed countries because we started lockdown early. If it is stopped now, all gains would be lost. To consolidate, it is imp to extend it
— Arvind Kejriwal (@ArvindKejriwal) April 11, 2020
முன்னதாக, கொரோனா தடுப்புக்காக ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். காணொலிக்காட்சி முறையில் நடத்தப்பட்ட இந்த ஆலோசனையில், பிரதமர் மோடி முகக்கவசம் அணிந்து பங்கேற்றார். அப்போது, கொரோனா வைரஸ் பரவலை முற்றிலும் தடுக்கும் நடவடிக்கையாக, ஊரடங்கை நீட்டிக்குமாறு பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் கோரிக்கை விடுத்தனர். ஏப்ரல் மாத இறுதி வரையிலாவது ஊரடங்கை நீட்டிக்குமாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
மார்ச் 25ம் தேதி தொடங்கிய ஊரடங்கு ஏப்ரல் 14ம் தேதி வரை 21 நாட்கள் இருக்கும் என பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், ஏப்ரல் 14ம் தேதிக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்த அறிவிப்பு நிச்சயம் இன்று வெளியாகும் என்று தெரிகிறது.
இந்த நிலையில், இன்றிரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பை பிரதமர் அதிகாரப்பூர்வமாக தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM