தெலங்கானாவில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதுவரை நாட்டில் சமூகத்தொற்று பரவவில்லை என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தாலும் நாடு முழுவதும் ஊரடங்கு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு மேலும் நீடிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிரதமர் மோடி விரைவில் வெளியிடுவார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் தெலங்கானாவில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை அம் மாநிலத்தில் மொத்தம் 503 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 393 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 96 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 14 பேர் பலியாகியாகி இருப்பதாக சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பிரதமர் மோடி சனிக்கிழமை காலை மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்பதை பெரும்பாலான முதல்வர்கள் வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்தார்.