தோனி இப்போது ஓய்வுப் பெற்று வெளியேறிவிட்டால் மீண்டும் அவர் கிடைக்க மாட்டார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
38 வயதான மகேந்திர சிங் தோனி உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு எந்தவொரு கிரிக்கெட் போட்டியிலும் விளையாடவில்லை. அதனால், அவர் அடுத்ததாக எந்தப் போட்டியில் விளையாடப் போகிறார் என்று அவரது ரசிகர்கள் ஏக்கத்தில் உள்ளனர். ஐபிஎல் போட்டிகளிலாவது அவர் விளையாடுவார் என்று பார்த்தால் அதுவும் தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்தாண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் தோனிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், வீரேந்திர சேவாக், கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே ஆகியோர், தோனி மீண்டும் அணிக்குத் திரும்ப வாய்ப்பில்லை என்றே கருத்துகளைத் தெரிவித்தனர்.
ஆனால் இந்திய அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாஃபரும், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளரான பிராட் ஹாக்கும், தோனி இப்போதைக்கு ஓய்வுப்பெறமாட்டார் என்று அவருக்கு ஆதரவான கருத்துகளையே தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் தோனியின் ஓய்வுக் குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில் தனது கருத்துகளை தெரிவித்துள்ளார்.
அதில் நாசர் ஹூசைன் ” இந்திய அணிக்கு தோனியைத் தேர்வு செய்ய முடியுமா? இந்தக் கேள்வி மட்டும்தான் கேட்கப்படவேண்டும். ஓர் அணிக்குத் தேர்வாக வேண்டிய அனைவருக்கும் இந்தக் கேள்வி பொருந்தும். நான் பார்த்தவரை, தோனியால் இந்திய அணிக்குப் பெரிதளவில் பங்களிக்க முடியும். இலக்கை விரட்டும்போது ஓரிரு முறை அவர் தோல்வியடைந்திருக்கலாம். ஆனால் தோனியிடம் இன்னமும் திறமை இருக்கிறது” என்றார்.
மேலும் தெரிவித்த அவர் “பிசிசிஐ தனக்கு என்ன தேவை என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். ஒருமுறை தோனி ஓய்வுப்பெற்று வெளியேறிவிட்டால், மீண்டும் அவர் கிடைக்க மாட்டார். மகத்தான வீரர்கள் அரிதாகவே கிடைப்பார்கள். எனவே அவரை முன்பே ஓய்வுப்பெற வைத்து விடவேண்டாம். தோனி என்ன நினைக்கிறார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும். மேலும் தேர்வுக் குழுவினர் தான் தன்னை தேர்வு செய்ய வேண்டும் என ஏற்கெனவே தெளிவாக்கியுள்ளார்” என்கிறார் அவர்.