இங்கிலாந்து நாட்டில் கொரோனாவுக்கு ஒரேநாளில் 980 பேர் உயிரிழந்ததையடுத்து அந்நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
உலகளவில் கொரோனாவுக்கு இதுவரை ஒரு லட்சத்து 90 பேர் உயிரிழந்துள்ளனர். 16,38,216 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3, 69, 017 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் மிகப்பெரும் பேரிடரை சந்தித்துவரும் நாடுகளில் ஒன்றான இங்கிலாந்தில், பிரதமர் போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருக்கிறார். அவர் நலமுடன் இருப்பதாக தெரிவித்த இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சர் மேட் ஹான்காக் , மருத்துவத்துறையினர் எண்ணற்ற உயிர்களை காக்க கொரோனா யுத்தத்தின் முன்வரிசையில் நின்று போராடிக் கொண்டிருப்பதாகவும் ஈஸ்டர் விடுமுறையை கொண்டாட யாரும் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரேநாளில் 980 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்று கூறிய அவர், இதன் மூலம் பலி எண்ணிக்கை 8958 ஆக உயர்ந்துள்ளது என்றார். புதிதாக 8 ஆயிரத்து 600க்கும் அதிகமானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 73 ஆயிரத்து 758 ஆக உள்ளது.