இத்தாலியின் மிகக் குறைந்த வயது நோயாளி எனக் கருதப்பட்ட இரண்டு மாத குழந்தை கொரோனா வைரஸ் நோயிலிருந்து மீண்டதால் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 89,415 பேர் உயிரிழந்துள்ளனர். 3,37,133 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸால் கடுமையான பாதிப்புக்குள்ளான நாடு இத்தாலி.
ஐரோப்பிய நாடுகள் பலவும் கொரோனாவால் கொடூரமாகப் பாதிக்கப்பட்டாலும் இத்தாலிக்குத்தான் இழப்புகள் அதிகம். இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17669 ஆக உள்ளது. இதனிடையே மார்ச் 18 அன்று தெற்கு நகரமான பாரியில் உள்ள மருத்துவமனையில் தாயும் இரண்டு மாத குழந்தையும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், நாட்டின் மிகக்குறைந்த வயது நோயாளி எனக் கருதப்பட்ட இரண்டு மாத குழந்தை கொரோனா வைரஸிலிருந்து மீண்டதால் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.