‘நீங்கள் அனைவரும் வீட்டுக்குள் இருந்தால், எமனிடமிருந்து தப்பிக்கலாம். நீங்கள் உள்ளே இருந்து, கொரோனாவை எமனிடம் ஒப்படையுங்கள்’ என்று இரண்டு இளைஞர்கள் எமன், சித்ரகுப்தன் வேடமிட்டு மக்களிடம் கொரோனா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது, கவனத்தைப் பெற்றிருக்கிறது.
கரூர் மாவட்டத்தின் தெற்கு எல்லையாக இருக்கிறது, கடவூர். இந்த ஊரைச் சுற்றி, 32 குக்கிராமங்கள் உள்ளன. அந்த கிராமங்களைச் சுற்றி, இயற்கையே வட்ட வடிவில் மலைகளை அமைத்துள்ளது. வெளியிலிருந்து இந்த 32 கிராமங்களுக்கும் சென்று வர மூன்றே மூன்று வழிகள்தாம் உள்ளன. இந்தப் பகுதியே மிகவும் வறட்சியான பகுதி.
Also Read: `பசியால் துடிப்பது என்னைத் தூங்கவிடல!’ -செருப்பு தைக்கும் தொழிலாளிகளை நெகிழவைத்த உதவி ஆய்வாளர்
இங்குள்ள மக்களின் அடிப்படைத் தேவைகளுக்குரிய பொருள்கள் கிடைப்பதிலும் சிரமம் இருக்கிறது. இந்தச் சூழலில், கொரோனா வைரஸ் தொற்று பிரச்னையால், இந்தியாவில் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் கொத்துக்கொத்தாக வெளியில் நடமாடி, காவல் துறையினருக்குத் தலைவலியை ஏற்படுத்தி வருகிறார்கள்.
இந்தச் சூழலில், கடவூர்ப் பகுதியில் உள்ள 32 கிராம மக்களில் பலர் வெளியில் நடமாடி வருகிறார்கள். இதைக் கேள்விப்பட்ட கடவூர் பெரியப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாயக்கண்ணனும், விஜயகாந்தும், தங்கள் பகுதி மக்களுக்குப் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த நினைத்தார்கள். அதன்படி, மாயக்கண்ணன் எமன் வேடமும், விஜயகாந்த் சித்ரகுப்தன் வேடமும் அணிந்து, மக்களிடம் கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். தரகம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் அன்னம் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்களின் உதவியோடு ஊர் ஊராகப் போய் இப்படி நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து, மாயக்கண்ணனிடம் பேசினோம். “கொரோனா வைரஸின் மோசமான வீரியம் குறித்து அரசும், மருத்துவர்களும், மீடியாவுமே தொடர்ந்து சொன்னாலும், பெரும்பாலான மக்கள் அதுகுறித்த அச்சம் இல்லாமல் வெளியில் நடமாடுகிறார்கள். அதுக்குக் காரணம், பக்கத்தில் அதனால் பாதிக்கப்பட்ட யாரும் இல்லாததுதான். அதுவும் படிக்காத மக்கள் அதிகம் நிறைந்த எங்க பகுதி மக்கள் அதுகுறித்த அச்சமே இல்லாமல் வெளியில் நடமாடுவதைப் பார்த்ததும், எங்களுக்கு வருத்தமா போயிட்டு.
அவர்களுக்குக் கொரோனா வைரஸின் தீவிரத்தைப் பற்றி உணர்த்தணும்னு நினைச்சோம். ஏற்கெனவே, ஊராட்சிகளில் சுகாதாரம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த சாமியாடி சொல்லும் வேஷம் போட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். அதனால், கொரோனா பற்றி மக்களிடம் வித்தியாசமான கெட்டப்புகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த நினைத்தோம்.
அதன்படி, நான் எமன் வேஷமும், விஜயகாந்த் சித்ரகுப்தன் வேஷமும் போட்டுக்கிட்டுப் போய், ஊர் ஊராக விழிப்புணர்வு ஏற்படுத்திக்கிட்டு வர்றோம். மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் வீதிகளில் சுற்றித் திரிந்தவர்களைக் கண்டறிந்து, அவர்களிடம், `கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அப்படி இருக்கையில், நீங்கள் இப்படி வெளியில் சுற்றித்திரிந்தால், அது எளிதில் பரவி மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
இதனால், எமதர்மன் பாசக்கயிற்றை வீசாமல், பாசவலையை வீசி கும்பலாகப் பிடித்துச் சென்றுவிடுவார். எனவே, வீட்டில் தனிமையைக் கடைப்பிடித்து, கொரோனாவை எமனிடம் ஒப்படையுங்கள்’னு பேசுவோம். இது மக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தப் பயன்படுது. அடுத்து, குறவன், குறத்தி வேடமிட்டு, நாங்கள் 32 கிராம மக்களிடமும் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இருக்கிறோம்” என்றார்.
#GameCorner
கொரோனா அச்சம், லாக் டவுன் பரபரப்பு, வொர்க் ஃப்ரம் ஹோம் அலப்பறைகள் அத்தனைக்கும் மத்தியில் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இதோ ஒரு குட்டி கேம்.