கொரோனா வைரஸ் உலக மக்களையும் பல்வேறு நாட்டின் அரசாங்கங்களையும் கதிகலங்க செய்து வருகிறது. ஏறத்தாழ 15 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டும், சுமார் 75,000 பேர் உயிரிழந்தும் உள்ளனர். உலகமே இக்கட்டான சூழலை எதிர்கொண்டு வரும் நிலையில், கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியைக் கண்டறிவதில் பல்வேறு நாட்டின் மருத்துவர்களும் அராய்ச்சியாளர்களும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

தற்போதையச் சூழலில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சையில், ஹைட்ராக்சிக்குளோரோயின் எனும் மலேரியாவுக்கான தடுப்பு மருந்து முக்கியமான ஒன்றாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமாகப் பாதிக்கப்பட்டால் உள்நாட்டுத் தேவைக்காக அதிக அளவில் தேவைப்படலாம் என்ற நோக்கில், மத்திய அரசு இந்த மருந்தை ஏற்றுமதி செய்ய தடை விதித்திருந்தது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கடந்த சில தினங்களுக்கு முன்பு, பிரதமர் மோடியைத் தொலைபேசியில் அழைத்ததோடு, ஹைட்ராக்சிக்குளோரோயின் மருந்து ஏற்றுமதிக்கான தடையை விலக்குமாறு கேட்டுக் கொண்டார். உரையாடலுக்குப் பின்னான சில மணி நேரங்களில், இந்தியா விதித்திருக்கும் தடையை நீக்காவிட்டால், விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என மறைமுகமாக எச்சரித்திருந்தார் அதிபர் ட்ரம்ப்.

ட்ரம்பின் இந்த மறைமுக சாடலுக்குப் பிறகு, மனிதாபிமான அடிப்படையில் பிற நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயினை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் ட்ரம்ப் தலைமையில், பிரதமர் மோடிக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில், அமெரிக்கா, இலங்கை உட்பட 30 நாடுகளுக்கு மருந்து ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. இந்நிலையில், அமெரிக்கா தலைமையிலான நாடுகளின் பட்டியலில் இடம்பெறாத பிரேசில், ஹைட்ராக்சிக்குளோரோகுயின் மருந்தை தங்களுக்கும் ஏற்றுமதி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
குளோரோயினை ஏற்றுமதி செய்வது தொடர்பாக, பிரேசில் அதிபர் போல்சனரோ பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் மருந்துக்கான வேண்டுகோளை முன்வைக்கும்போது, புராண காவியமான ராமயணத்தில் குறிப்பிட்டிருக்கும் சில முக்கிய நிகழ்வுகளை அதிபர் போல்சனரோ குறிப்பிட்டுள்ளார்.

ராமாயணத்தில், ராமனின் தம்பி லட்சுமனனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அனுமன் சஞ்சீவி மூலிகையை இமயமலையில் இருந்து கொண்டு வருவதைப்போல, கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிளில், கண் தெரியாதவர்களுக்கு பார்வையை மீட்டெடுக்கும் இயேசுவைப் போல பிரேசிலுக்கு இந்தியா உதவ வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், உலகளாவிய மருத்துவ இக்கட்டான சூழலில், பிரேசிலும் இந்தியாவும் ஒன்றிணைந்து செயல்பட்டு மக்களைக் காக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, கடிதம் எழுதுவதற்கு முன்னதாக பிரதமர் மோடியும், பிரேசில் அதிபர் போல்சனரோவும் தொலைபேசியில் கடந்த சனிக்கிழமை தொடர்புகொண்டு, உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் நிலை குறித்து பேசியதாகவும், பிரேசிலும் இந்தியாவும் இணைந்து கொரோனா வைரஸை எவ்வாறு எதிர்கொள்வது என விவாதித்ததாகவும் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

மேலும், கடந்த ஜனவரி மாதம் கொண்டாடப்பட்ட70-வது இந்திய குடியரசு தின விழாவில் பிரேசில் அதிபர் போல்சனரோ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்திய குடியரசு தின விழாவில் கலந்துகொண்ட மூன்றாவது பிரதமர் போல்சனரோ என்பது குறிப்பிடத்தக்கது.