சுற்றுலா சிறப்பு வாய்ந்த நீலகிரி மாவட்டத்தில், வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களுக்குச் சென்றுவந்த 1 ,312 பேர் கண்காணிக்கப்பட்டுவருகின்றனர். இதில் 770 பேர் கண்காணிப்பு காலம் முடிந்த நிலையில், மீதமுள்ள 442 பேர் தொடர் காண்காணிப்பில் உள்ளனர். மேலும், அவர்களிடம் நாள்தோறும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
ஊட்டி காந்தள் பகுதியைச் சேர்ந்த 42, 50 வயதுள்ள இரண்டு ஆண்கள், கோத்தகிரி மெயின் பஜார் பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய ஆண், குன்னூர் ராஜாஜி நகர் பகுதியைச் சேர்ந்த 49 வயதுள்ள ஆண் என டெல்லி மாநாட்டிற்குச் சென்று திரும்பிய 8 பேரில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். “தொற்று உறுதிசெய்யப்பட்ட நால்வர் வசித்த பகுதிகள் ஏற்கெனவே பாதுக்காப்பில் உள்ளன. இந்தப் பகுதிகளில் உள்ள 19,753 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
380 குழுக்கள் வீடு வீடாகச் சென்று பரிசோதனை மற்றும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும், இவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்த 30 பேரைக் கண்டறிந்து, அவர்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளோம். மேலும், அவர்களது குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியில் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டுவருகிறது.
இவர்களில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை. பாதிக்கப்பட்ட நான்கு பேர், கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்” என்றார்.