உத்தரப் பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்திய போலீஸார் மீது தாக்குதல் நடத்திய 42 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் வெளியே சுற்றும் செயல் அதிகரித்துக் காணப்படுவதால் ஊரடங்கைக் கடுமையாக்க பல்வேறு மாநில அரசுகளும் உத்தரவு பிறப்பித்துள்ளன. அந்த வகையில் உத்தரப் பிரதேசத்தில் ஊரடங்கு நேரத்தில் மக்களைக் கட்டுப்படுத்த சென்ற காவலர்கள் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் இசாத் நகரில் உள்ள காரம்பூர் சவுத்திரி பகுதியில் ஐபிஎஸ் அதிகாரி வர்மா தலைமையிலான காவலர்கள் ரோந்துப் பணி சென்றுள்ளனர். அப்போது வெளியே நடமாடிய மக்களை அவர்கள் கட்டுப்படுத்தியதாகத் தெரிகிறது. இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட, காவலர்களை அப்பகுதி மக்கள் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த ஐபிஎஸ் அதிகாரி உட்பட சில காவலர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள இசாத் நகர் போலீஸார், 150 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன் 42 பேரைக் கைது செய்துள்ளனர். இதில் 3 பெண்கள் மட்டும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், தாக்குதல் நடத்திய நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.