வேலூர் கலெக்டர் சண்முக சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்தியா முழுவதும் `கொரோனா’ வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. ராணிப்பேட்டை, திருப்பத்தூரை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இந்த மாத இறுதிக்குள் `கொரோனா’ தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 500-ஐ தாண்டக்கூடும். ஆனால், மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் 125 வென்டிலேட்டர்கள் மட்டுமே உள்ளன.
கூடுதலாக வென்டிலேட்டர்கள் கிடைக்கவில்லை. உலகம் முழுவதும் இதற்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயரும்போது யாரைக் காப்பாற்ற வேண்டும், யாரைக் காப்பாற்ற முடியாது என்கிற நிலை ஏற்படும். மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் வைரஸ் தொற்று தாக்காதவாறு சமூக விலகல் மூலம் தனித்திருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஆனால், பொதுமக்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் அலட்சியமாக வழக்கம்போல் நடமாடுகிறார்கள். மூன்று நாள்களுக்குத் தேவையான காய்கறிகளையும், பத்து நாள்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்களையும் வாங்கி வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டோம். அதன் பிறகும் நாள்தோறும் காய்கறி, மளிகைப் பொருள்கள், மருந்து மாத்திரைகளை வாங்குவதற்காகக் கடைகளுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
தேவையின்றி இரண்டு சக்கர வாகனங்களில் சிலர் சுற்றுகிறார்கள். கடைகளில் எவ்வளவு எச்சரிக்கை செய்தும் அதை அலட்சியம் செய்துவிட்டு கும்பல் கும்பலாக நின்று பொருள்களை வாங்குகிறார்கள். `கொரோனா’ பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மாவட்ட நிர்வாகம் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும், இது மிகப்பெரிய பின்னடைவாக அமைவதுடன் பொதுமக்களின் உயிருக்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது’’ என்று வேதனைப்பட்டுள்ளார்.