இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்தியாவில் தற்போது 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. சமூக விலகலைப் கடைப்பிடிக்கும்விதமாக ஊரடங்கு உத்தரவு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பேசிய பிரதமர் மோடி, `கொரோனா வைரஸூக்கு எதிரான போரில் ஒற்றுமையைக் காட்டும்விதமாக ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வீட்டில் உள்ள மின்விளக்குகளை அணைத்துவிட்டு விளக்குகளை ஏற்றி நம் ஒற்றுமையை வெளிப்படுத்துவோம்’ என்று கோரிக்கை வைத்திருந்தார்.
Also Read: `ஊரடங்கால் உணவின்றித் தவித்த முதியவர்; போலீஸாரின் மனிதாபிமானம்!’- நெகிழ்ந்த யுவராஜ் சிங்
`கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டாமல் நாட்டு மக்களை விளக்குகளை ஏற்ற சொல்கிறார். இதனால் என்ன பயன்?’ என எதிர்க்கட்சிகள் கடுமையாகச் சாடின. `இந்த இக்கட்டான சூழலில் நாங்கள் அரசியல் செய்ய நினைக்கவில்லை அரசுடன் இணைந்து மக்கள் பணியாற்றவே விரும்புகிறோம். வீதிகளுக்கு வந்து கைகளைத் தட்டச் சொல்வதாலும் இரவு நேரத்தில் வீடுகளில் விளக்குகளை ஏற்றுவதாலும் என்ன பயன்’ என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.
இருப்பினும் பிரதமரின் வேண்டுகோளை ஏற்று நாட்டு மக்கள் நேற்று இரவு 9 மணிக்கு தங்கள் வீடுகளில் விளக்குகளை ஏற்றி ஒற்றுமையை வெளிப்படுத்தினர். COVID 19, இந்திய வரைபடங்கள் ஆகியவற்றை வரைந்து விளக்குகளால் அலங்கரித்தனர். சில இடங்களில் மக்கள் வானவேடிக்கைகளை வெடிக்கச் செய்தனர். இணையத்தில் வெளியான வீடியோ ஒன்றில் மக்கள் கூட்டமாகக் கையில் தீப்பந்தங்களை ஏந்தி `கோ கோ கொரோனா’ என முழங்கியவாறு கூட்டமாகச் சென்ற நிகழ்வுகளும் அரங்கேறின.
Also Read: `274 மாவட்டங்களில் கொரோனா தாக்கம்; 3,374 பேருக்கு பாதிப்பு!’ – மத்திய அரசு தகவல்
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் பல்ராம்பூர் பா.ஜ.க மகளிரணி தலைவி மஞ்சு திவாரி நேற்று இரவு 9 மணிக்குத் தனது வீட்டில் விளக்குகளை ஏற்றாமல் கைத்துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுள்ளார். அந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் மஞ்சு திவாரி துப்பாக்கியால் வானை நோக்கி சுடுகிறார். அருகில் இருக்கும் நபரோ அவரை உற்சாகமூட்டுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதையடுத்து பல்ராம்பூர் காவல்துறையினர் மஞ்சு திவாரிக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள மஞ்சு திவாரி,“நான் வெளியே வந்து பார்த்தபோது நகரம் முழுவதும் விளக்குகள் மற்றும் மெழுகுவத்திகளால் அலங்கரிக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். இதைக் கண்டதும் நான் சற்று உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன். பட்டாசுகள் வெடித்ததால், நான் தீபாவளி என நினைத்துவிட்டேன். நான் கவனக்குறைவாக இதைச் செய்துவிட்டேன். என் தவற்றை ஒப்புக்கொள்கிறேன் இதற்காக மன்னிப்பு கோருகிறேன்’ என வருத்தம் தெரிவித்துள்ளார்.