உலகம் முழுவதும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது. இதுவரை உலகம் முழுவதும் 12,77,196 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 69,567 பேர் இறந்துள்ளனர். 2,66,458 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் 4,314 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 118 பேர் உயிரிழந்துள்ளனர். 328 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.
`கொரோனாவிற்கு எதிரான போரில் நாம் ஒற்றுமையாக இருப்பதை வெளிப்படுத்த 05.04.2020 அன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் விளக்கை அணைத்து தீபம், டார்ச், செல்போன் லைட்டை ஒளிரவிட வேண்டும்’ எனப் பிரதமர் மோடி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள், அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் என்று பலரும் விளக்கை அணைத்து தீபம், டார்ச், செல்போன் லைட் ஆகியவற்றை ஒளிர வைத்தனர்.
இதைத்தொடர்ந்து, கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று விளக்கு ஏற்றியதாக ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தப் புகைப்படத்தின் உண்மைத்தன்மை என்ன என்பதை விகடன் ஃபேக்ட் செக் குழு பரிசோதித்தது.

பலரால் பெருமளவு பகிரப்படும் இந்தப் புகைப்படம் நேற்று எடுக்கப்பட்டதல்ல. WWF – (World Wide Fund for Nature) சார்பில் 2007-ம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் எனப் பல்வேறு விஷயங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்விதமாக மார்ச் மாதம் ஒரு நாளில், இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை விளக்குகளை அணைத்து வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது.

அந்த ஒரு மணிநேரத்தை எர்த் ஹவர் என்ற பெயரில் கொண்டாடி வருகிறது.
இந்த எர்த் ஹவர் நிகழ்வில் 2018-ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதி கேரள முதல்வர் பினராயி விஜயன், தனது குடும்பத்தினருடன் பங்கேற்றபோது போது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் சிலரால் தவறாகப் பரப்பப்பட்டு வருகிறது.

மேலும், `கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று விளக்கு ஏற்றியுள்ளார்’ என்ற தலைப்புகளில் வலம் வந்துகொண்டிருக்கிறது. அது உண்மையில்லை. இந்தப் புகைப்படம் 2018-ம் ஆண்டு எர்த் ஹவரின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதே உண்மை.