இந்தியா மிகவும் கசப்பான ஒரு அனுபவத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஒருபுறம் கொரோனா நோய் பல உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மற்றொருபுறம் மக்கள் மத்தியில் ஆழமாகப் பதிந்துள்ள பயத்தால், கொரோனா பாதித்தவர்கள், கொரோனா அறிகுறி உள்ளவர்கள், கொரோனா பாதிப்புடையவர்களுடன் பழகியவர்கள் சுற்றத்தாரால் அனுபவிக்கும் கொடுமைகள் மிகவும் ஆபத்தை விளைவிப்பதாக உள்ளது. சில நேரங்களில் அது உயிரிழப்பில் கொண்டு போய் விட்டுவிடுகிறது. அப்படித்தான் மதுரையிலும் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அந்த வகையில்தான் ஜார்க்கண்ட் மாநிலத்தில் மிகவும் துயரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
உனா மாவட்டம் பன்கார்க் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழை விவசாயி தில்ஷாத் முகமுத். இவர் தன்னிடம் உள்ள மாடுகள் மூலம் கிடைக்கும் பாலினை விற்று வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில்தான், டெல்லி தப்லிஜி ஜமாட் மாநாட்டில் பங்கேற்ற இருவரை தில்ஷாத் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. இந்த தகவல் கிடைத்ததும் காவல்துறை அவரை அழைத்துச் சென்று சோதனை நடத்தினர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஏப்ரல் 2ம் தேதி, உள்ளூர் போலீசார் தில்ஷாத்தை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொரோனா சோதனைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா இல்லை எனத் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் அவரை போலீசார் வீட்டில் வந்து விட்டுச் சென்றுள்ளனர்” என்றார்.
இதனிடையே, விவசாயி தில்ஷாத்திற்கு கொரோனா தொற்று இருப்பதாகவும், அவரால் மற்றவர்களுக்கு கொரோனா பரவும் எனக் கூறி அவரை கிராம மக்கள் ஒதுக்கியுள்ளனர். திட்டியும் தீர்த்துள்ளார்கள். அத்துடன் நின்றிருந்தால் பரவாயில்லை, அவருக்கு வாழ்வாதாரமாக இருந்த பாலினை வாங்கிக் கொள்ளவும் மறுத்துவிட்டார்கள். இதனால், மிகுந்த மன வேதனை அடைந்த ஏழை விவசாயி தில்ஷாத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் கூறுகையில், “எங்களை அவர் கொரோனா பாதிக்கப்பட்டவர் போல் நடத்தினார்கள். எங்களிடம் இருந்து பால் வாங்க மறுத்துவிட்டார்கள். எங்கள் குடும்பம் பிழைப்பதற்கு இருந்த ஒரே வருமானம் அதுதான். தில்ஷாத்திற்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா இல்லையென்றுதான் வந்தது. அவர் டெல்லி மாநாட்டிற்கும் செல்லவில்லை. அப்படியிருந்தும், வார்த்தைகளால் எல்லோரும் துன்புறுத்தினார்கள்” என்றார்.
‘பி.எம் கேர்ஸ்’ என்ற பெயரில் உலாவும் போலியான இணையதளங்கள் – எச்சரிக்கும் காவல்துறை