கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டவரை மருத்துவமனையிலிருந்து உற்சாகமாய் கரவொலி எழுப்பி சக நோயாளிகள் அனுப்பி வைத்தனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவிலேயே ஆரம்பத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக அறியப்பட்ட மாநிலம் கேரளா. அதிலும் குறிப்பாகக் கேரளாவின் கசர்கோட் நகராட்சியில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்தது. காரணம் அங்கிருப்பவர்களில் பெரும்பாலானோர் துபாயில் பணிபுரிந்து அண்மையில் திரும்பியவர்கள். அந்த வகையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் துபாயிலிருந்து திரும்பிய நபர் தான் சுஹைல்.
இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து கசர்கோட் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 12 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கொரோனா பாதிப்புடனும், உயிர் பயத்துடனும் மருத்துவமனைக்கு வந்த அவர், லுங்கி அணிந்தபடியும், கையில் மஞ்சைப் பையுடனும் மகிழ்ச்சியுடன் இன்று வீட்டிற்குப் புறப்பட்டார்.
சுஹைல் நடக்கும்போது மருத்துவ ஊழியர்கள் மற்றும் சக நோயாளிகள் இருபுறமும் வரிசையாக நின்று கைகளைத் தட்டி உற்சாகமூட்டினர். மருத்துவமனையிலிருந்து புறப்பட்ட சுஹைல், தனக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார். இதற்கிடையே கசர்கோட் பகுதிக்குக் கடந்த பிப்ரவரி 20ஆம் தேதிக்குப் பின்னர் துபாயிலிருந்து திரும்பிய அனைவரது தகவல்களைக் கேரள அரசு சேகரித்து வருகிறது. அவர்களின் யாருக்கேனும் கொரோனா வைரஸ் பரவியிருக்கக்கூடும் என்பதால், அவர்களைத் தனிமைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.