வேலூர் மாவட்டத்தில் உள்ள 4 அரசு மருத்துவமனைகள், 47 ஆரம்ப சுகாதார நிலையங்கள், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் நாளொன்றுக்குப் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட புற நோயாளிகள் சிகிச்சைக்காக வந்துசெல்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோருக்குப் பெரிய அளவில் உடல் நலக்குறைவு இருப்பதில்லை. எனினும், அவர்கள் மருத்துவமனைக்குத் தொடர்ந்து வந்துசெல்கிறார்கள்.
இதனால், மற்ற நோயாளிகளிடமிருந்து அவர்களுக்கும், அவர்களிடமிருந்து பிறருக்கும் நோய்த் தொற்றுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. அதேபோல் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கும் ‘கொரோனா’ நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அனைவரின் நலன் கருதியும், வேலூர் மாவட்டத்தில் ‘டெலி மெடிசின்’ முறையை மாவட்ட நிர்வாகம் நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளது.
இதன்மூலம், புற நோயாளிகள் மருத்துவமனைக்கு அவசியமின்றி வரத் தேவையில்லை. வீட்டிலிருந்தே மருத்துவர்களின் வாட்ஸ்அப் எண்ணுக்குத் தகவலை அனுப்பி உடல் நலக் குறைவுக்கான மருந்து, மாத்திரைகளை பதில் தகவல் மூலம் பெற்றுக் கொள்ளலாம். மருத்துவர்களை செல்போனில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்புகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பணி நிமித்தம் காரணமாக, மருத்துவர்களால் செல்போன் அழைப்பை எடுக்க முடியாமல் போனால் வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்ப வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் மருத்துவர்களே வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் நோயாளிகளைத் தொடர்புகொண்டு தகுந்த மருத்துவ ஆலோசனைகளை வழங்குவார்கள்.
அதே நேரம், எக்காரணத்தைக் கொண்டும் மருத்துவர்களுக்கு வாட்ஸ்அப் வீடியோ காலில் அழைத்து பொதுமக்கள் தொந்தரவு செய்யக் கூடாது. இந்த சேவைக்காக, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்களின் செல்போன் எண்கள் கலெக்டர் அலுவலகத்தின் http://vellore.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இந்த வசதியை மருத்துவ சேவையாகப் பயன்படுத்திக்கொள்ளுமாறும் இந்த ‘டெலி மெடிசின்’ வசதி ஊரடங்கு அமலில் உள்ள வரை நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சி.எம்.சி தனியார் மருத்துவமனையிலும் ஓரிரு நாளில் ‘டெலி மெடிசின்’ சேவை நடைமுறைப்படுத்தப்படும் என்று வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.