டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவருக்கு கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் அவரது 9மாத கர்ப்பிணி மனைவிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவருக்கு கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில், அவரது கர்ப்பிணி மனைவிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் கர்ப்பிணி ஒருவருக்கு கொரோனா பாதிக்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.
ஏற்கனவே கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா பாதிக்கப்பட்டால் எப்படி பராமரிக்க வேண்டுமென்ற குறிப்புகள் தயார் நிலையில் இருப்பதால் அதன்படி இவர் கவனிக்கப்படுவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தெரிவித்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் மகளிர் நல மருத்துவர், ”அடுத்த இரண்டு-மூன்று வாரங்கள் தாய்க்கும் குழந்தைக்கும் முக்கியமான காலகட்டம். கர்ப்பக் காலத்தில் தாயின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், அவளுக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். கருப்பையில் இருக்கும் வரை குழந்தைக்கு ஆபத்து இருக்காது, ஆனால் பிரசவத்திற்குப் பிறகு, தாயிடம் இருந்து குழந்தை நோய்த்தொற்று பரவும் வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.
பிரசவ நேரத்தில் மருத்துவர்கள் உடுத்தப்பட வேண்டிய உடைகள், கையுறைகள் என அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. கர்ப்பிணியின் கணவரான எய்ம்ஸ் மருத்துவருக்கு கொரோனா ஏற்கெனவே உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது அவரது மனைவிக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது சற்றே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் மொத்தம் 8 மருத்துவர்களுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நெருக்கமாக நின்று பேசினால் கொரோனா பரவ வாய்ப்பு – சொல்கிறது அமெரிக்க ஆய்வு