கொரோனா வைரஸ் எதிரொலியால் ஏர் இந்திய நிறுவனம் தங்கள் விமானச் சேவையை ஏப்ரல் 30 வரை ரத்து செய்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் விமானம், ரயில் மற்றும் பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த ஊரடங்கினால் விமானச் சேவை நிறுவனங்கள் பெரிதும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளன.
இதனால் அந்நிறுவனங்கள் தங்கள் ஒப்பந்த ஊழியர்களை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. அத்துடன் ஊழியர்களின் சம்பளத்தையும் குறிப்பிட்ட அளவு பிடித்தம் செய்துள்ளன. அந்த வகையில் பெரிதும் பாதிக்கப்பட்ட விமானச் சேவை நிறுவனங்களில் ஒன்றான ஏர் இந்தியா, ஏப்ரல் 30 வரை இந்தியாவில் தங்கள் முன்பதிவுகளை ரத்து செய்துள்ளது.
உள்நாடு மற்றும் வெளிநாடு ஆகிய இரு சேவைகளும் ரத்தாகியுள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவும் வேகத்தின் பின்விளைவு காரணமாக ஏப்ரல் 30 வரை விமானச்சேவை ரத்து செய்யப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேசமயம் ஊரடங்கு காலம் முடிந்த பின்னர் வெளியாகும் அறிவிப்பின்படி, மீண்டும் ஆலோசிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.