சென்னையில் கொரோனா போலீசார் நாள்தோறும் ஒவ்வொரு விதமாக கொரோனா விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக, சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் 16 பெண் ஆய்வாளர்கள் அணிவகுத்து நின்றபடி சாலையில் சென்ற வாகன ஓட்டிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு அளித்தனர். இதனைத் தொடர்ந்து இன்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டனர்.
ஆணையர் விஸ்வநாதன் உத்தரவின் பேரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணைக் ஆணையர் ஜெயலட்சுமி தலைமையில், கே.கே நகரிலுள்ள ராணி அண்ணாநகர் குடியிருப்பு வாசிகளிடம் நூதன முறையில் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. பெண் ஆய்வாளர் ஒருவர் தலையில் கொரோனா வைரஸ் போன்று வடிவம் கொண்ட ஹெல்மட் அணிந்தபடி, ஒலி பெருக்கியில் பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அப்போது மற்ற போலீஸார் வீட்டை விட்டு வெளியில் சென்று வரும் பெரியவர்கள், குழந்தைகளைத் தொடுவதற்கு முன்பு, கை கால்களை எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும் என்பது குறித்தும், 1, 1/2 மீட்டர் இடைவெளி விட்டு எவ்வாறு நிற்க வேண்டும் என்பது பற்றியும் மாதிரி செய்து காட்டினர்.
துணைக்கமிஷனர் ஜெயலட்சுமி பேசுகையில், “குழந்தைகள் எந்தக் காரணத்தைக் கொண்டும் வீட்டை விட்டு வெளியில் வராமல் இருக்க அவர்களுக்குப் பாட்டிமார் கதைகளைச் சொல்லி அவர்களைச் சந்தோஷப்படுத்துங்கள்’’ என வேண்டுகோள் விடுத்தார். மேலும் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியில் வராமலிருக்க அந்தக் குடியிருப்பில் உள்ள அனைத்து ஏழை குழந்தைகளுக்கும் நோட்டு, புத்தகங்கள், கலர் கிரேயான்ஸ்கள், அரிசி பைகள் ஆகியவற்றை அவர் வழங்கினார். இதைப்போல திருவல்லிக்கேணி லாக் நகரில் குழந்தைகளுக்கு ஓவியம் வரைய புத்தகங்கள் அளித்தார்.