கொரோனா வைரஸ் தொற்றால் இறப்போம் என தெரிந்தும், சுவாசக் கருவி வேண்டாம் அதை பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு பயன்படுத்துங்கள் என்ற 90 வயது மூதாட்டி அனைவரையும் கலங்கச் செய்துள்ளார்.
கொரோனா வைரஸ் உலகின் பல்வேறு பகுதிகளில் பரவி மனிதர்களை கொன்று குவித்து வருகிறது. ஆனால் மற்றொரு புறம் மனிதத்தையும், இயற்கையும் வெளிக்கொண்டு வந்துள்ளது. மாசுபாடு இல்லாத காற்று, சத்தம் இல்லாத நகரங்கள், போக்குவரத்து இல்லாத சாலைகள், விலங்குகள் உலவும் தெருக்கள், தூய்மையாகும் நதிகள், மதத்தை கடந்து வரும் மனித நேயம், ஒற்றுமையை உணரும் சுற்றத்தாரர் என உலகிற்கு ஒரு பாடத்தையும் கொரோனா நடத்தியுள்ளது.
இந்த கொடுமையான காலத்தில், வாழும் தெய்வங்கள் சிலரையும் நம்மால் காண முடிகிறது. உயிரையும், குடும்பத்தை பொருட்படுத்தாமல் உழைக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள், ஓய்வில்லாமல் சுழலும் அரசுகளின் சக்கரம், மக்களை வீடுகளுக்குள் காக்க வீடு திரும்பாத காவலர்கள் என இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
இந்த வரிசையில் அனைத்திற்கும் மேலாக ஒரு மூதாட்டி மனிதத்தையும், வாழ்வையும் உணர்த்திவிட்டு இயற்கை எய்தியுள்ளார். பெல்ஜியம் நாட்டினை சேர்ந்த 90 வயது மூதாட்டி சுஸன்னே ஹாய்லியர்ட்ஸ். இவர் கட்டந்த 20ஆம் தேதி அன்று கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். கொரோனா தொற்று தீவிரமாக இருந்ததால் மருத்துவர்கள் அவருக்கு செயற்கை சுவாசக் கருவியை பொருத்தியுள்ளனர்.
அப்போது மருத்துவர்களிடம் பேசிய மூதாட்டி, “நான் நன்றாக வாழ்ந்து முடித்துவிட்டேன். எனக்கு இந்தக் கருவி வேண்டாம். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட வாழ வேண்டிய இளைஞர்களுக்கு இதை பயன்படுத்துங்கள்” எனக் கூறி அனைவரையும் கலங்கடித்துள்ளார். தான் இறந்துபோவோம் எனத் தெரிந்தும் இதை அவர் சொல்லியிருக்கிறார். இதைத்தொடர்ந்து அவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துவிட்டார். இறந்தாலும் உலகிற்கு வாழ்வின் அர்த்தத்தை அவர் புரிய வைத்துவிட்டு சென்றுள்ளார். இதற்கிடையே ஊரடங்கு உத்தரவால் அவரது இறுதி சடங்கில் கூட, அவரது மகளால் பங்கேற்க முடியவில்லை என்ற சோகம் நிகழ்ந்துள்ளது.