மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர் எனக் கருதி, வீடியோ எடுத்து வெளியிட்டதால் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்தவர் முஸ்தபா(35). இவர் கேரளாவில் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதற்கு முன்பே தமிழகம் வந்திருந்த முஸ்தபா மதுரை முல்லைநகரில் உள்ள தனது அம்மா வீட்டில் தங்கியுள்ளார். இதனையடுத்து அவருக்குச் சளி, இருமல், உடல் சோர்வு ஆகியவை ஏற்பட்டதாகத் தெரிகிறது.
புதுச்சேரியைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
இந்நிலையில் இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் இவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் எனக் கருதி, சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். தகவல் பெற்று, முஸ்தபாவின் வீட்டிற்கு வந்த சுகாதாரத்துறை பணியாளர்கள் அவரையும், அவரது தாயாரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தனர். ஆனால் அங்கு 108 ஆம்புலன்ஸ் வருவதற்கு இரண்டு மணிநேரத்திற்கு மேல் ஆனதாகத் தெரிகிறது.
இந்நிலையில், அப்பகுதி மக்களே சரக்கு வாகனம் ஒன்றைத் தயார் செய்து இருவரையும் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். அத்துடன் முஸ்தாபா சோர்வாக அமர்ந்திருப்பது, சரக்கு வாகனத்தில் ஏறிச் செல்வது போன்றவற்றை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து மருத்துவமனைக்கு சென்ற முஸ்தபாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா தொற்று இல்லை எனக் கூறி வீட்டிற்கு அவரையும், அவரது தாயாரையும் அனுப்பிவைத்தனர்.
வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஈஷா யோகா வலியுறுத்தல்
இதற்கிடையில், மக்கள் பதிவு செய்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவியது. இதனைப் பார்த்து மனவேதனையடைந்த முஸ்தபா நேற்று காலை, சென்னையிலிருந்து நெல்லைக்குச் சீனி மூட்டைகளை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அவரது உடலை மீட்ட மதுரை ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.