கும்பகோணம் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ-வான சாக்கோட்டை அன்பழகன், ஊரடங்கால் கும்பகோணம் மக்கள் எந்தவிதத்திலும் பாதிக்காத வகையில் தானே நேரடியாகக் களத்தில் நிற்பதுடன், தன் சொந்தப் பணத்தைக் கொண்டு பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க நிர்வாகிகள் சிலர், “கொரோனா பரவாமல் தடுப்பதற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வாரத்தைக் கடந்துவிட்டது. திடீரென இந்த நடைமுறை அமல்படுத்தபட்டதால் ஏழை, எளிய மக்கள் மற்றும் தினக்கூலிக்கு வேலைக்குச் செல்பவர்கள் பெரும் பாதிப்புகுள்ளாகியுள்ளனர். இதை உணர்ந்த எம்.எல்.ஏ அன்பழகன், `இந்தநேரத்தில் மக்களுடன் நிற்க வேண்டும், அவர்களின் துயரத்தைத் துடைக்க வேண்டும்’ எனக் கூறி தன் சொந்த பணத்தை செலவு செய்து பல்வேறு வகையிலான உதவிகளைச் செய்து வருகிறார்.
Also Read: உலகில் கொரோனா வைரஸ் தொற்றே ஏற்படாத நாடுகள் இவைதான்!
முதற்கட்டமாக, கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொரோனா சிறப்பு வார்டுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் 100 கட்டில்களை வழங்கினார். இதையடுத்து உணவில்லாமல் தவித்து வந்த முதியோர், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் எனப் பலரும் பயன்பெறக்கூடிய வகையில் 150 பேருக்கு இரண்டு வகையான சாதத்தைத் தினமும் வழங்கி வருகிறார். ஊரடங்கு முடியும் வரை இவற்றைத் தொடர இருக்கிறார்.
மேலும், தூய்மைப் பணியாளர்கள் பணி செய்யும்போது போதிய உபகரணங்கள் இல்லாமல் வேலை செய்ததைக் கவனித்து அவர்கள் பயன்பெறும் வகையில் 2,000 முகக்கவசம் உள்ளிட்ட பொருள்களை மாநகராட்சி நிர்வாகத்திடம் வழங்கினார். மாஸ்க் அணியாமல் வெளியில் வந்த மக்களிடம் கொரோனாவால் ஏற்படும் பாதிப்பு குறித்து விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களுக்குத் தானே மாஸ்க்கை மாட்டிவிட்டார்.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்களுக்காக முகக்கவசம், சானிடைசர், சோப் உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறார்.
இதைத் தொடர்ந்து, வருமானமின்றித் தவிக்கும் 100 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உதவித் தொகையாக ரூ.1,000 வழங்க இருக்கிறார்.
`வாக்களித்த மக்களின் தேவைகளை நிறைவேற்ற எப்போதும் களத்தில் நிற்பவன் நான். இப்படியொரு சூழ்நிலையில் உங்களுக்குத் துணை நிற்க வேண்டும் என்பதற்காகவே இதைச் செய்கிறேன். இப்போது மட்டுமல்ல எப்போது என்ன தேவைபட்டாலும் என் வீட்டின் கதவைத் தட்டலாம்’ என அவர்களிடம் தெரிவித்திருக்கிறார்” என்கின்றனர் நெகிழ்ச்சியுடன்.