டெல்லியில் புற்றுநோய் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் அந்த மருத்துவமனை தற்போது கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது
கிழக்கு டெல்லியில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவருக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த புதன்கிழமை உறுதியாகியுள்ளது. அவர் வெளிநாடு பயணம் ஏதும் செல்லவில்லை. மேலும், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையும் அளிக்கவில்லை. இந்நிலையில் இங்கிலாந்தில் இருந்து வந்த தன்னுடைய சகோதரர் மூலம் அவருக்கு கொரோனா பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது அவர் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் நிலையில் அவர் பணியாற்றிய புற்றுநோய் மருத்துவமனை தற்போது கண்காணிப்பின் கீழ் வந்துள்ளது. உள்ளே 60க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் புற்றுநோய் மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. உட்புற நோயாளிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் வெளியில் இருந்து யாரும் அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
டெல்லியின் மோகன்புரியில் உள்ள கிளினிக்கைச் சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு கொரோனா உறுதியான நிலையில் அவரிடம் 7 நாட்கள் சிகிச்சைப் பெற்ற மற்றும் தொடர்பில் இருந்த 800க்கும் அதிகமானோர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நோயாளியின் செல்போனை பயன்படுத்தியதால் செவிலியருக்கு பரவிய கொரோனா!